Tuesday, November 10, 2015




நிலவின் உப்பு
கடலில் புரண்டிருக்கும்போது
திரும்பினோம் தத்தம்
குடில்களுக்கு
இந்தக் கோப்பையின்
தேநீர் தித்தித்திருக்குமாவென
எங்கோயிருந்து உறிஞ்சியவாறிருக்கிறாய்
வெறும் ஒரு பிடி உயிரை.








காலங்களில் அவள் வசந்தம். கலைகளிலே அவள் ஓவியம். மாதங்களில் அவள் மார்கழி. மலர்களிலே அவள் மல்லிகை.

எனவே கலை கீதாவை விரும்பினான். ஒரு சிப்ஸ் கடையில் சிப்ஸ் வாங்க வந்தாயா என்பது போல கேட்டு பழக்கமாகி அப்புறம் ஒருநாள் மிகுந்த பணிவுடன் காப்பி வாங்கிக் கொடுத்து பின்னொரு நாளில் நகரத்தின் ஒளிமழை பொழியாத இருள் தெருவில் அவளது புன்னகையை முத்தமிட்டான். உதடுகளில் அழுந்தாத உதடுகள் பக்கவாட்டில் உராசிப்பிரிந்ததற்கே அவனது உள்ளாடையில் பிசுபிசுப்பு படர்ந்து விட்டது. மிகுந்த தயக்கம். கூச்சமும்தான். இருந்தாலும் எச்சரிக்கையுடன் அவனும் அவளும் இருந்த நான்கு அடுக்கு வீடுகளின் ஒரு வீட்டுக்கு மேலே வரமுடியுமா என்று கேட்டு விட்டான்.

வர முடியுமே.

நான்காம் மாடி பால்கனி விளிம்பில் பாதத்தை அழுத்திக் கொண்டு தவறினால் மரணம் என்கிற நிலையில் அடுத்த காலை எடுத்துப் போட்டு பற்றி தாவிக் கொண்டு வந்து மொட்டை  மாடியில் அவனுடன் படுத்தாள் கீதா. அறுத்து வைத்த தர்பூசனிப்பழம் போல ஒரு நிலா. கொஞ்சம் விண்மீன்கள். ஜீவதுடிப்பு மட்டுப்பட்டதற்கு அப்புறம் அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள். அவன் நாய்க்குட்டி போல எட்டும் பகுதிகள் அனைத்தையும் ருசி பார்த்திருந்தவாறு தனது காதலின் வலிமையை திருகி திருகி சொல்லி சோர்ந்தான். அப்படி மறுபடி அமைந்த தினங்களின் அந்த இடைவிடாத சிரிப்புகளுக்கிடையில் அவனால் சொல்ல முடியாமல் தவறின எதிர்காலம் நெஞ்சுக்குள் வலித்தது. என் கண்ணே, நீ சொல்வாய் எனில் இந்தக்கணம் கீழே பாய்ந்து இறந்து போவேன் என சொல்லுவதைக் காட்டிலும் அப்படி பாய்ந்து இறந்து போவதற்கு மனம் முந்தியது ஏன் என்பது பிடிபடவில்லை.

மூச்சு பிடிப்பு வந்த மாதிரி.



பிழைப்புக்கு பணி புரிகிற இடத்தில் ஒன்று என்றால் இரண்டு என்றும் இரண்டு என்றால் நான்கு என்றும் வேலைகளை தலையில் சுமத்திக் கொண்டு தன்னை மறந்திருப்பது வழக்கம். அல்லது கீதாவை நினைக்காமல் இருக்க முயல்வது வழக்கம். ஒரு திங்கள்கிழமை யாரோ ஒருவன் உன்னை பார்க்க வந்திருக்கிறான் என்றார்கள். யாரோ இல்லை,  லம்பா ராமுடு. அரை மில்லி மீட்டர் புன்னகைகளை கடந்து அவன் யாரோ, இவன் யாரோ. கடை தெருவுக்கு கூட்டிச் சென்று வாழைத்தண்டு ஜூசை வாங்கிக் கொடுத்து சாப்பிட சொன்னான். உடம்புக்கு நல்லது என்று சொன்னதும்    சரிதான்.  ஆனால் கீதாவைப் பின் தொடர்வது உன் உடம்புக்கு ஆகாது என்றான்.

உண்மையில் மூச்சு பிடித்தது.

காதலை காதலர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கேள்விப்படுகிறவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்றான் லம்பா ராமுடு. இதை சொல்லும் போது அவனது முகத்தில் வேதனை துடித்தது. படிகளை கடந்து பால்கனியில் இருந்து தாவி மொட்டை மாடியில் அவனுக்காக அவள் காத்திருந்த அந்தத் தருணத்தை உன்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று அவன் கேள்வி எழுப்பினான்.


உற்ற காதலன் துணையிருக்க இடைவெளி இல்லாமல் சிரிக்கிற பாக்கியம் அவளுக்கு கிடைத்திருக்கிறது. எதன் பெயராலும் அதை எவரும் பறிக்க நினைப்பது பாவம் என்று விட்டு கொஞ்சம் பேசாமல் இருந்தான்.

அதெல்லாம் இருக்கட்டும். சாக ஆசைப்படுகிறாயா என்று கேட்டான்.

கலையரசன் பிறந்தது வளர்ந்தது எதுவும் சொல்லிக் கொள்ளுவது போல இருக்காது. பன்றிகள் போல அங்கே மனிதர்கள் இருந்தார்கள். யார் யாருக்காகவோ அவர்களுடைய வாழ்வு இருந்தது. அப்பா எவளுடனோ போனார். பெற்று விட்ட பிள்ளைகளுக்காக மாடு போல உழைக்க வேண்டியிருந்த அம்மா கசப்பை மட்டுமே பகிர்ந்தாள். உடன் பிறந்தவர்கள் பாயும் புலிகளாய் இருக்கவே, அவன் யாருமில்லாமல் தனித்திருந்து என்ன நடக்குமோ என்று விழித்திருந்து கிடைக்கும் போது சாப்பிட்டு பசித்திருந்து ஒரு தரிசனம் பெற்றான். அது ஏதாவது ஒரு திரைப்படம் முடுக்கி விட்ட ஞானமாகவும் இருக்கலாம். அது இந்த அழுக்கு தீவில் இருந்து தப்பித்து வெளியேறி ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக் கொள்வது. பரிசுத்தமாய் பத்து பேர் மதிக்கிற மாதிரி கண்ணியமாய் நடமாடுவதற்கு இதோ அம்மணமாய் படுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறவள் ஒத்துழைத்திருக்க முடியாதா. இவை எல்லாம் எளிய கனவுகள் தானே? மொட்டை மாடிக்கு ஏறும் முன்னே அரை மயக்க நிலையில் இரண்டாம் அடுக்கு பாப்பாவின் ஜியாமண்ட்ரி பெட்டியில் இருந்து எடுத்த காம்பசை ஒங்கி இறக்கினான். அம்மா என்று வீரீட்டாள் அவள். மறுபடி மறுபடி குத்தினான். அவளது குறி ரத்தசகதியானது. தொண்டை கிழிய கூச்சலிட்டுக் கொண்டிருந்தவளின் குரல் அடங்குவதற்கு முன் கலை இறங்கி நடந்துவிட்டான். ஆட்கள் படிக்கட்டு ஏறிக் கொண்டிருந்தார்கள்.

அவனது சாமி அடங்கவில்லை.

எங்கே போக வேண்டும் என்று தெரிந்திருந்தது. நகரின் வடக்குப் பகுதி. கடலலைகள் கோஷமிட்டன. சில இடங்களில் பதுங்கினான். மதில் சுவர்களை தாண்டிக் குதித்தான். முன்னேறி சென்று ராட்ஷச லாரி ஒன்றில் சரக்குகளை ஏற்றும் ஆட்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த லம்பா ராமுடுவைப் போட்டான். போகிற போக்கில் அங்கேயே எடுத்த ஒரு இரும்புத்தடி தான். அது மிக சாதாரணமாய் பகுதி ஊரை ராஜாங்கம் செய்து கொண்டிருந்த ஒருத்தனின் வரலாறை முடித்து வைக்க போதுமானதாயிருந்தது. திடுக்கிட்டு விலகியவர்கள் திட்டு திட்டாய் கூடிக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். உண்மையில் யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

கலை மனசின் புயல் அடங்கி அமர்ந்து மண்ணால் கோபுரம் குவித்தான்.

நிமிர்ந்து போலீசைக் கூப்பிடுங்கள் என்றான்.


2

அவளுக்கு ராம் பாய் என்று தான் பெயர். பிடிக்கவில்லை. எப்படி செய்வது என்று நான்கு பேரிடம் விசாரித்து அத்தனை அரசு சடங்குகளுடனும் மோனிக்கா என்று மாற்றிக் கொண்டாள். யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொதுவாகவே அவள் எதையாவது செய்யும் போது யாரும் தப்பு சொல்ல மாட்டார்கள். தப்பாய் வராது என்று நம்புவார்கள். அப்படி ஏதேனும் ஆட்ஷேபம் கிளம்பினால் உடனடியாய் எதையாவது பேசி அதை அடக்கி விடுவாள். எல்லோரும் அவள் பேச்சுக்கு பயந்தார்கள். இப்போது அவளால் பேச முடியவில்லை. மொபைலை வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள். முதலாளி ராஜப்பா அவளையே வெறித்துப் பார்த்திருப்பது தெரிந்து தான் இருந்தது. என்ன செய்வது,  என்ன செய்வது, என்ன செய்வது என்று இருந்தது அவள் முகம். ஆர்ஜெஆரின் எச்சிலைத் தின்னும் நாய்கள் வீட்டுக்குள் புகுந்து பாத்திர பண்டங்களை தூக்கிப் போட்டு உடைத்து மோனிக்கா எங்கே என்று கேட்டிருக்கின்றன. அவைகள் இப்போது இங்கே வந்து கொண்டு இருக்கின்றன.

முதலாளி ராஜப்பா ஒரு முறை வந்து காத்திருக்கிற வாடிக்கையாளர்களைப் பார்த்து விட்டு மோனிக்காவைப் பார்த்தார். அவருக்கு ஏழைகளை இளக்காரமாய் கருதி அவர்களை குடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு இருந்ததால் கிண்டல் செய்கிறோம் என்கிற நினைப்பில் கேட்டார்.

“இப்போது என்ன செய்யலாம்?”

”அவர்களை அனுப்பி விட்டு கடையை மூடி விடலாம். போய் விடலாம்.”

அட. என்னிடம் மாதமானால் சம்பளத்தை இரந்து வாங்கும் ஜந்து ஒன்று என்னை கேலி செய்கிறது என்பதாய் எடுத்துக் கொண்டு அவள் மேல் வீசுவதற்கு அவர் அந்த அட்டை பெட்டியை தூக்கும் போது ஒரே ஒருவன் தான் வந்தான்.


சோப்பு சீப்பு வளையல்கள் ஸ்டிக்கர் பொட்டு அட்டைகள் என்று கையில் கிட்டியதை எல்லாம் தூக்கிப் போட்டான். வசமாய் கிடைத்த ஒரு கண்ணாடிப் பேழையை வீசி பிரம்மாண்டமாய் ஒங்கி வளர்ந்து நின்றிருந்த அலமாரியின் கண்ணாடிகளை நொறுக்கித் தள்ளினான். தடுக்க முந்திய முதலாளி ராஜப்பாவின் இரண்டு கன்னங்களிலும் கொழுக்கட்டைகள் முளைத்தன. அது போதாமல் அவரது முகத்தில் ரோஜா வர்ண ஹோலி பவுடரைகொட்டி ஊதா நிறத்தில் ஒரு பிராவை எடுத்து வாயில் திணித்து அவரை நடனமாட சொல்லி விட்டு அப்புறம் தான் அந்தக் கத்தியை வெளியே எடுத்து மோனிக்கா யார் என்று கேட்டான். அவள் முன்னே நடக்க அவன் தொடர்ந்தான். அவன் காட்டிய ஷேர் ஆட்டோவில் வேறு பலரும் இருந்து மரியாதையாய் ஒதுங்கி இடம் கொடுக்க இவள் எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

சில விஷயங்கள் அவளுக்கு தெரியும். ஆர்ஜெஆர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஆர்ஜெஆர் இவளிடம் ஐலவ்யு சொன்ன காலத்தில் லம்பா ராமுடு இருந்தான். அவனை அப்புறப்படுத்தி விட்டு வந்தவன் இவன். கலையரசன். இவனை அப்புறப்படுத்த இன்னொரு நாள் வேறு ஒருவன் வருவான். லம்பா ராமுடுவோ, காம்பஸ் கலையோ காணாமற் போனால் யாரும் தேட மாட்டார்கள்.


அவள் சொன்னாள்.

“உன்னை நினைத்தால் எனக்கு பரிதாபமாய் இருக்கிறது.”

அவளைத் தொட ஒரு நல்ல நாள் பெரிய நாள் சொல்ல கேரள நம்பூதிரி விமானத்தில் வந்தார். ஐப்பசியில் தீபாவளியுடன் ஒட்டிக் கொண்டு ஒரு அமாவசை வருமில்லையா, அது வரை ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க வேண்டும் பெருந்தகையீர் என்று விடவே கலையின் பொறுப்பில் மோனிக்கா வைத்துக் கொள்ளப்பட்டாள். சர்வ நிதானமாய் இருந்த அவளைப் பார்க்கவே அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் தேசத்துக்காக உழைக்கும் ராணுவ வீரன் போல தனது கடமைகள் அனைத்தையும் பற்று வைக்காமல் செய்தான்.  பெண்களை வெறுக்க வேண்டும் என்கிற அலட்டல் உள்ளுக்குள் அவ்வளவு சரியாய் இல்லை என்பது ஒரு தினம் நடு இரவில் அவள் நல்ல மீன் குழம்பு வைத்து சுட சுட சோறு பரிமாறிய போது புலப்பட்டது. இனி மேல் கண்ட நேரத்துக்கு பரோட்டாவை தின்று வைக்கக் கூடாது என்று அதட்டிய போது தலையை அசைத்து வைத்தான்.

அவள் சொன்னாள்.

”தர்மத்துக்கு தலை வணங்க வேண்டும். தர்மம் தழைக்க பாடுபட வேண்டும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள் இல்லை என்பது பழைய சினிமா பாடல்களில் இருப்பதால் புரிகிறது தான். தர்மத்துக்கு தலை வணங்குவது சிறப்பு. ஆனால் அதர்மத்துக்கும் தலை வணங்கி விடுவது சிறப்பிலும் சிறப்பு. இல்லை எனில் ஒரு பூச்சிக்கு கூட தெரியாமல் பனிக்கட்டி போல ஆவியாகி விடுவாய்.”

அது ஏதோ ஒரு விதமான உண்மை போலதான் பட்டது.  மோனிக்காவின் குடும்பம்  போலீசுக்கு போகாமல் கம்பெனி ஏற்பாடு செய்த வீட்டுக்கு மாறியது. அவளது அண்ணன் மட்டும் மிகவும் முரண்டு பிடிக்கவே அவன் கேட்ட ஹோம் தியேட்டரை அந்த வீட்டில் அமைத்துக் கொடுத்தார்கள். உற்றார் உறவினரும் சுற்றமும் நட்பும் எவ்விதமான கோபமும் குமைச்சலும் கலந்து விடாத நமுட்டு சிரிப்புடன் அவள் நன்றாய் இருக்கிறாளா என்று கேட்டு வைத்தது இன்று தண்ணீர் லாரி வருமா என்பது போல தான் இருந்தது. மோனிக்காவே கூட உதவிக்கும் காவலுக்கும் இருந்த மூன்று பெண்களிடம் பேன் பார்த்துக் கொண்டு சிரித்தவாறிருந்தாள்.

அவள் சொன்னாள்.

”உலகு நல்லவர்களால் நிரம்பித் ததும்புகிறது என்கிற உண்மையை நான் இடைவெளி இல்லாமல் அனுபவித்து வருகிறேன். அடிக்கடி அதன் பொருட்டு சிலிர்த்துக் கொண்டு அடங்குவதால் உடலே கூட சோர்ந்து போகிறது. கேள்விப்பட்டிருக்கிறாயா, புத்தாடை சூட்டி இனிப்பு வழங்கி அனாதைக் குழந்தைகளுடன் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார் ஒருவர். உயிருக்கு போராடும் ஒருவருக்கு ஓ பாசிட்டிவ் ரத்தம் வேண்டும் என்று ஒருவரும் சமையல் கேஸ் இணைப்புக்களை சரி பார்த்துக் கொள்ளுவது எப்படி என்று ஒருவரும் மிளகு ரசத்தின் பலாபலன்களை வேறு ஒருவரும் பொது மக்களின் நலன் கருதி எல்லோருக்கும் பரவலாய் சென்று சேர முகப் புத்தகத்தில் கருத்திடுகிறார்கள். அதை நூற்றுக் கணக்கான ஒருவர்கள் அக்கருத்து ஆயிரக்கணக்கான ஒருவர்களை சென்று சேர ஷேர் செய்கிறார்கள். சருமம் தொள தொளத்து அரை மயக்கத்துடன் நடமாடும் முதியவள் ஒருத்தி சாலை கடந்து செல்ல ஒருவர் உதவுகிறார் மற்றும் ஒருவர் அவளை கலை நயத்துடன் புகைப்படம் எடுக்கிறார். அட,  அதை விடு. ஊனமுற்ற ஒரு மனிதன் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறியதை ஒருவர் சினிமாவாகவே எடுத்து விட்டார். இப்படி ஒருவர்,  ஒருவர், ஒருவர் என்பது சிறுதுளி பெருவெள்ளமாய் பல்கிப் பெருகி நாமெல்லாம் நிற்பதற்கு நிலம் இல்லை தெரியுமா?புளகாகிதம் அடைவதில் ஒரு எல்லை இல்லமல் போய் பரபரவென்று நான் தலையை எல்லாம் பிய்த்துக் கொள்ளுவதுண்டு.”

கலைக்கு எதுவும் புரியவில்லை. அப்புறம் எப்போதாவது புரிந்து கொள்ள முடியும் என்பது போல கேட்டிருந்தான்.


“அடித்த அடியில் முதலாளி ராஜப்பா வெறும் ராஜப்பாவாய் தொங்கட்டம் போட்டு துவண்டதை நினைத்துக் கொள்கிறேன். நமக்கு சமயம்  வாய்த்தால் நான் ஒருவர் ஒருவர் என்று சொன்ன ஒவ்வொருவரையும் நிற்க வைத்து கிழிக்க வேண்டும். ஆம்,  குறைந்த பட்ஷம் மலம் கழிக்கும் போதாவது கதறும் அளவிற்கு கிழிக்க வேண்டும். ஏன் என்றால் யாருக்கு என்ன நீதி தேவையோ அதை கிடைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறவர்கள்-  ங்கோத்தா, இவர்கள்தான் ! “

தீபாவளி நெருங்கும் போது பூவிருந்தவல்லிப்பக்கம் ஒரு பாண்டியனின் காலை எடுத்து விட்டு அரசுப் பேரூந்தில் கலை வந்து கொண்டிருந்தான். போனில் ஒருசெய்தி. ஆர்ஜெஆர் மருத்துவமனையில் அனுமதி. அந்தப் பெண் மோனிக்கா சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டாள். பேரூந்தை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து ஒடுவதற்குள் பெரிய திருப்பம். ஆர்ஜெஆர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீட்டுக்கு போயாயிற்று. என்னடா இது. ஒன்றும் இல்லை. ஆர்ஜெஆருக்கு வயது எழுபத்தெட்டு. மோனிக்காவின் முகத்தை பார்த்துக் கொண்டே முட்டை,  கருவாடு,  மட்டன் என்று சந்தோஷமாய் விழுங்கி வைத்திருக்கிறார் .பிரஷர் கூடி இருக்கலாம். அப்படி சொல்லுவது அவருக்கு பிடிக்காது என்பதால் அது ஒரு ஆனந்த மயக்கம்தான். அமாவசையன்று திரு நிறை செல்வி மோனிக்கா கழுத்தில் திரு நிறை செல்வன் ஆர்ஜெஆர் அவர்கள் தாலியைக் கட்டி புது இல்லமொன்றில் புது வாழ்வை துவங்கப் போகிறார்கள்.


வெடிகளின் ஒலியில் கேட்பது பண்டிகைகளுக்கு முந்தும் மனிதர்களின் பதட்டமா?

அவள் சொன்னாள்.

”இதைப் போல ஒரு தீபாவளி. விடியற்காலை எண்ணெய் குளியல் முடிந்த பிறகு போட்டுக் கொள்ள புது சட்டை இல்லை. ஆட்டுக்கறி வாங்கவில்லை. அம்மா போடுகிற சாபங்களை கேட்டுக் கொண்டே அப்பா என்னை சைக்கிளின் முன்னே உட்கார வைத்துக் கொண்டு செய்த வேலையின் கூலி வாங்கி வர ஏதோ தேவடியாள் மகனின் அலுவலகத்துக்குப் போனார்.  பணத்தை வாங்கி அம்மாவுக்கும் எனக்கும் புதுத் துணி வாங்கி ஆட்டுக்கறியும் அதை சமைக்க பொருட்களும் வாங்கி சந்தோஷத்தின் குருட்டுத்தனத்தில் அவர் சைக்கிளை மிதிக்க எதிரே பாதையை விட்டு விலகிய லாரி எங்களை பார்த்துத் திரும்பியது.

என்னை வீசி எறிந்ததும் அவர் நசுங்கிக் கூழாய் போனதும் ஒரே நொடி.வெறும் ஒரு நொடி.

கலையரசா, பணம்டா !


பணம் ! “

இல்லாதவனாய் இருக்கும் போது எதை விரும்புகிறோமோ அதை எடுத்துக் கொள்ளத் தாவுகிறோம். இருக்கிறவனுக்கே எங்கே இல்லாமல் போய் விடுமோ என்கிற ஆத்திரம் இருக்கத் தானே செய்கிறது?கீதா இப்போது கலைக்கு மனைவி தான் என்றாலும் காலங்களில் அவள் வசந்தமில்லை, கலைகளில் அவள் ஒவியமில்லை,  மாதங்களில் அவள் மார்கழியில்லை,  மலர்களிலே அவள் மல்லிகையுமில்லை. கூட்டு சேர்ந்து வேட்டை நிகழ்த்துகிறார்கள். கீதா இப்போது வித்வத்துடன் கொலை செய்ய கற்றுக் கொண்டாள் என்பதைவிட,  பொத்தல் விழுந்து தைத்த குறியை சற்று பொத்திக் கொண்டு ஒரு அரை வட்டம் போட்டு சாகப் போகிற ஆம்பிளையின் கொட்டைகளில் ஒரு மிதி மிதிப்பாள் பாருங்கள், அதைக் காண கண் கோடி வேண்டும் முருகா.  ஒரே விஷயம் , வழக்கம் போல இந்த உலகில் எங்கே என்ன நடந்தாலும் , அவர்கள் நம்மைத் தேடிக் கொண்டு வர மாட்டார்கள் என்று மட்டும் நம்பிக்கை வளர்த்துக் கொண்டு நாம் பாட்டுக்கு நம்ம வேலையை பார்க்கலாம். எனவே வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.



காலங்களில் அவள் வசந்தம்.
ஒரு சிறுகதை.

எம் கே மணி.