Saturday, July 30, 2016

தில்ருபா.
ஒரு சிறுகதை.





எனக்கு இந்தக் கதையை சொல்லுவதில் பெரிய விருப்பமெல்லாம் கிடையாது. எல்லோரும் எப்படியாவது இருந்து ஒழியுங்கள் என்பது என் முடிவு. ஆனால் நிதின் அழைத்தான். கதைக்கு உதவ வேண்டும் என்றான். சரி. வேறு வழியில்லை. அவன் தங்கமணியின் மகன். நான் சினிமாவில் இருந்து விலகி ஒரு பிம்பாகவும் இருந்து பிழைக்கலாம் என்று பல காலமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் குண்டுசட்டியைத் தாண்டி குதிக்க ஆகவில்லை என்பதால் அதன் தொடர்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அப்புறம் பொல்லாத இந்த வயிற்றுப் பிழைப்பு. வாங்க சார். வணக்கம் சார். குட் மாணிங்க், குட் நைட் அண்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ்  சார். மூளையை திருடிக் குடிக்கும் பத்தாயிரம் அட்டைகள் முன் படுத்துக் கிடந்த பிறகு எப்ப திருந்தப் போறனோ என்று இன்னும் விசனம் பாடிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்ய? அதுகளோ வீசி எறிந்த எலும்புத் துண்டுகளின் கணக்கு பேசிக் கொண்டிருக்கின்றன.

" அங்கிள், எதாவது சொல்லுங்க ! "

" இர்றா ! "

பரத்தும் சந்தியாவும் காதலர்கள். எப்பவும் அடிதடி. ஒருவரை மற்றவர் வெறுப்பேற்றிக் கொள்ளுவதில் அவன் எல்லை தாண்டி விடுகிறான். வேறு ஒரு பெண்ணுடன் படுத்து விடுகிறான். குற்றம் ! அவளும் விட்டு விடுவதில்லை. அவன் நொந்து போகிற மாதிரி ஒரு இமாலய தவறை செய்து விடுகிறாள். அது என்ன தவறாய் இருக்க வேண்டும் என்று தான் என்னை குடைந்து கொண்டிருக்கிறான். அவளும் வேறு ஒருவனோடு படுத்து விட வேண்டியது தானே என்றால் அது இடிக்கிறதாம். மக்களுக்கு பிடிக்காது என்கிறான் கனத்த குரலில். லவ் மீ இஃப் யு டேர் போன்ற படங்களை பாருடா என்றால் தலையை சொறிகிறான். சோம்பேறி. படம் போட்டாலே தூங்கி விடுவான்.  பொதுவாகவே தின்னுவதும், தூங்குவதும் தான். தடியன். எஞ்சினீயரிங்க் முடித்த பிறகு சினிமா என்றிருக்கிறான். அதுவும் தமிழ் சினிமா. அதில் அவனால் எதையும் செய்ய முடியும் என்று ஒரு பிடிவாதம்.

எப்படியும் இவன் தன் அப்பனைத்தான் கொண்டிருப்பான்.

ஒரு நாள் போனில் " அவனுக்கு ஒரு மயிரும் தெரியாது ரவி ! " என்று தங்கமணியாய் என்னிடம் சொன்னாள்.

அப்படிதான் நானும் நினைக்கிறேன். ஆயினும் அதை வெளியில் சொல்லுவது அபவாதங்களை தான் சேர்க்கும். அது மட்டுமல்லாமல் என் வயதுக்கு, அனுபவத்துக்கு இளைய தலைமுறையை நோக்கி உதடு பிதுக்குவதில் பெருமை என்ன. ஆத்மார்த்தமாவே நான் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு இது.

எது.

79- 80 தான். வெங்காய விலை எல்லாம் கூடி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து எம் ஜி ஆர் அரசை டிஸ்மிஸ் செய்தார்கள். அப்போது நான் கேரளத்தில் இருந்தேன். இங்கே இருந்து நீ பிடுங்க வேண்டியது எதுவும் இல்லை என்று அப்பா துரத்தி விட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம். போதாதா? மூன்று மாதம் மொழி கைகூடாமல் பிதுங்கி, அப்புறம் ஜித்தனாகி தங்கமணியை காதலிக்க ஆரம்பித்தேன். எனக்கு பதினெட்டு. அவளுக்கு பதினேழு. எழுத்துக் கூட்டி போபனும் மோளியும் படித்து டிஸ்கஷன் செய்தேன். மாமாவே எனது கண்கள் விரிந்து மூடாததை கவனித்து என்னடா என்றார். அம்மம்மா ம் ம் என்று முனகிக் கொண்டு எழுந்து போனாள். எதிர் வீடு தான். அவளது அம்மா நான் சிகரெட்டு பற்ற வைக்க தீப்பெட்டி தருவதுண்டு.

ஒரு நாள் ஐ லவ் யூ சொல்லியாக வேண்டும்.

தங்கமணியைப் பற்றி நிறைய சொல்லலாம். ஏதோ கொஞ்சமாய் பேசுவது போலிருக்கும். பத்து நாள் முகம் பார்க்க முடியாது போனாலும் சொல்லி விட்டுப் போன பிரபஞ்ச ரகசியத்துடன் நான் பாட்டுக்கு சல்லாபித்திருப்பேன். அம்மாவிடமும், தம்பியுடனும் வரும் சம்பாஷணையில் அவள் சொல்லுவதெல்லாம் பொய். அப்படிதான் அவள் எல்லோருடனும் இருப்பது போலவும் இல்லாதது போலவுமிருந்த்தது. மிகவும் யோசித்து வைத்து நான் சொல்லும் ஜோக்குக்கு யாருமே சிரிக்க முடியாது. அவளும் சிரிக்க மாட்டாள். ஒரு கால் அரைக்கால் புன்னகை தென்பட இலேசாய் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டுப் போவாள். அது உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை போலிருக்கும். இப்போது கூட நான் ஒரு நாளை நினைத்துக் கொள்கிறேன். சிவராத்திரி பூரம். யானைகள் அணிவகுத்து நிற்க பஞ்சவாத்தியத்தின் கிறக்கத்துடன் தாளப்பொலியில் தீபம் ஏந்தி நின்ற தங்கமணியின் முகத்தில் நான் நெருப்பை பார்த்தேன். அல்லது விட்டு விடலாம், அதன் எதிரொளிப்பை பார்த்தேன். அன்று நடு இரவு பூரப் பறம்பின் பின்னால் ஒடும் நதிக்கரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு நட்ஷத்திரங்களில் கண்ணீர் விட்டது ஆர்வக் கோளாறாய் தான் இருந்திருக்கும். அதன் துல்லியத்தை நான் எந்தக் காலத்திலும் ஐயமுற மாட்டேன். இந்தத் தருணங்கள் தான் உயிராசையை போற்றுகிறது என்பதையெல்லாம் இன்று சொல்ல முடிவதாயிருந்தாலும் மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் வேறு.

நிலை கொள்ளாமல் தவித்திருந்த ஒரு நாளில் அவள் கல்லூரி விட்டு வரவில்லை. ப்ரீ டிகிரிக்காரி. ஏதாவது இருக்குமல்லவா. காத்து கண்கள் பூத்த அந்த நேரத்தில் இருந்த வில்ஸ் பாக்கெட் வேறு தீர்ந்து விட்டது. கிளம்பும் போது மாமி சக்கரையும் சோப் பவுடரையும் வாங்க முடியுமா என்றாள். அப்படியே முட்டை கோசு கிடைத்தாலும் வாங்கிக் கொள் என்று பையை கொடுத்தாள். ஒன்றரை கி மீ நடக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே நடக்கிற கடை. பராக்கு பார்த்துக் கொண்டு வளைவில் ஒரு மேடு ஏறும்போது என் எதிரே ஒரு பெண். ஜீன்ஸ் பேன்ட் போட்டு கறுப்பு முழுக்கை சட்டை மடித்து, முட்டை கண்ணாடி போட்டுக் கொண்டு அசாதாரணமாய். எப்படி இது? வியப்போடு அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே கடக்க என் கண்களை அடித்துப் பார்த்துக் கொண்டு தாண்டி சென்றாள். யோசனையுடன் பத்தடி நடந்து திரும்பிப் பார்க்க அவளும் அந்த கணத்தில் திரும்பிப் பார்க்கிறாள். கண்கள் சந்தித்தன என்றால் அதை சொல்லித் தானே ஆக வேண்டும்? என்ன நடக்கிறது? கடையில் இருந்து முதலில் ஒரு சிகரட்டை வாங்கிப் புகைத்து விட்டு பொருட்களுடன் திரும்பினேன். மாமா, மாமி, குழந்தைகளுடன் அந்தப் பெண்ணும் வீட்டு முற்றத்தில் இருந்தாள். என்னைப் பார்த்ததும் எல்லோரும் சி¡¢த்தார்கள்.

அவள் மீரா. என் சகோதரி . பெரியம்மா மகள். பம்பாயில் உறவினர் வீட்டில் தங்கி படிக்கப் போயிருந்தாள். பத்து வருடங்களுக்கு முன்னே தப்பிதவறி மாமா கல்யாணத்துக்கு வந்த போது விளையாடின குழந்தைகளில் அவளும் ஒருத்தியாய் இருந்திருப்பாள்.

" ஏண்டா, என்ன அப்படிப் பாத்த? "

" நீ கூடத் தான் பாத்த ! "

ரத்தம் என்கிறார் மாமா. இருக்கலாம். சாவியை வாங்கிக் கொண்டு மாமாவின் புதிய பறம்பை பார்க்கப் போய் பேசி கொண்டிருந்தோம். நால் ரெண்டு எட்டு சிகரட்டை காலி பண்ணி விட்டு, மிச்சமிருந்த கடைசி சிகரட்டை மாறி மாறி புகைத்தோம். மறுபடியும் ஒன்றரை கி மீ நடந்து வில்ஸ் பாக்கெட் வாங்கிக் கொண்டோம். திரும்பி வீட்டிற்கு போகிறோம் என்று பார்த்தால் எதிர் வீட்டுக்குள் என்னொடு நுழைந்தாள். தங்கமணியும் அவளது அம்மாவும் மீராவை விமரிசையாய் வரவேற்றார்கள். பேச்சு வாக்கில் மீரா டீ வேண்டும் என்றாள். நான் தங்கமணியை மட்டுமே பூலோகத்தில் இருப்பவளாய் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அம்மா நகர்ந்ததும் நடந்தது தான் சம்பவம்.

மீராவை நோக்கி பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்ட தங்கமணி தன் இதழ்களை ஏந்த- செம்ம கிஸ். வாய்ப்பே இல்லை. நடப்பது என்ன என்றே புரியாத நிலையில் குறைந்த பட்ஷம் நான் திரும்பிக் கொள்ளக் கூட இல்லை.

தங்கமணி ஒரு சதி லீலாவதியல்லவா?

நரேந்திரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவனோடு ஒட்டிப் பிறந்த சுரேந்திரனை மீராவுக்கு புடித்துப் போட்டாள். பேசி பேசி வழிவகை செய்து எர்ணாகுளத்தில் இரண்டு குடும்பங்களும் ஒரே பிளாட்டில் சேர்ந்து வசிக்க செய்தாள். மீராவும், தங்கமணியும் வாழ்ந்தனர். பழங்குடிகளுக்கான போராட்டங்களில் பல நேரம் மீராவுடன் தங்கமணியும் இருந்தாள். ஒரு நாள் அடையாளம் தெரியாத நபர்களால் மீரா கொல்லப்பட்ட போது சவ அடக்கத்துக்கு போயிருந்தேன். தனிமையில் தங்கமணி மீராவின் விதவையாய் தன்னை நினைத்துக் கொள்ளும் போது பெருமையாய் இருக்கிறது என்றாள். மறுக்க ஒன்றுமில்லை. என்னிடம் இருந்து வில்ஸை பிடுங்கி பற்ற வைத்து நீ யாரையாவது காதலிக்கிறாயா என்று மாமாவின் பறம்பில் கேட்ட போது நான் பதில் சொல்லாமல் விட்டது ஒரு விதமான விதி. ஆனால் அந்த நிமிடத்திலிருந்து மீராவை மதித்தேன். அவள் என் தங்கமணியை முத்தமிட்டது கூட எனக்கு பெருமையாய் தான் இருந்தது.  சோர்வூட்டும் இந்த அடிபிடி சர்க்கஸ் வாழ்க்கையில் ஏதாவது பத்திரிக்கையில்  மீராவின் புகைப்படத்தை காண நேரும் போது வாரிப் போடும். காலம் முழுக்க மீராவின் சுனையாய் இருந்த தங்கமணியை மெச்சிக் கொள்ளுவேன், காதலுடன். இன்னும் சொல்லப் போனால் வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதோ இந்தப் பயலின் எதிரே அமர்ந்து கொண்டிருப்பதும் அவளுக்காகத் தான்.

என்ன நடந்ததோ. இவன் ஒரு விதத்தில் தனது குடும்பத்திலிருந்து அன்னியப்பட்டிருந்தான் என்பதில் மாற்றில்லை. கவலைகள் திரண்டு விடும் என்று தோன்றும் போதெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விடுவது. அத்தனை பேரையும் வெறுக்கும் முனைப்பு பட்டவர்த்தனம். கூட உதவியாய் வேலை செய்கிறவர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்களது தரித்திரத்தை ரசிப்பது கூட புரிகிறது. இன்னும் நெருக்கத்தில் சொல்லுவது என்றால் சுரண்ட வேண்டியவர்களை சுரண்டித்தான் ஆவேன் என்பது போல என்னை அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.

ஒரு நாள் பல பேச்சுக்கு நடுவில் மிகவும் இங்கிதமான ஒரு பாவனையில் கேட்டேன். " உனக்கு உன் அம்மாவை மிகவும் பிடிக்குமில்லையா? "

" பிடிக்காது. அம்மான்னு இல்ல. எவளையும். தேவடியாளுங்க ! "

பார்த்திருந்தேன், எந்த வித முக பாவனையையும் காட்டி விடாமல்.

" அதனால தான் சொல்றேன். இனிமே பொண்ணுங்க சீன பேசறப்ப அது கண்ணியமா வரணும். அங்கிள், அவங்க எப்படி ஒழுக்கமா வாழணும்னு நாம கத்துக் குடுக்கணும். புரியுதா ?”
என்றான்.

" புரியுதுடா ! " என்றேன்.


Saturday, July 9, 2016





பாலில் புளிப்பேறும்
காலமற்ற கானகத்தின்
நிலவொளியில்
மண்ணில் விழுந்து புரள்கிறது
விண்ணை நோக்கி பாடுகிறது
ஒளிவில் இருக்கும்
ஓநாய்.

ஷட் அப்
வை லைக் திஸ் மேன்

சூ சூ

சன்னதமில்லை
சாகசமில்லை
சரசமோ, சாமர்த்தியமோ
இல்லை
குத்துவதோ, குத்துப்படுவதோ
இல்லவே இல்லை.

பொறுப்பாய் பொறுக்கி தின்னும் வாழ்க்கை.   

Friday, July 1, 2016



இறுதி நடனம் முடிந்து பிராண்டோ குடிக்கிறான். அந்தப் பெண்ணுடன் நடந்து உன் பெயர் என்ன என்றே கேட்டு விடுகிறான். கதையின் ஒரு வளைவில் அவனை சுட்டு முடித்து விட்டு போலீசாரிடம் அவன் பெயர் தெரியாது என்கிறாள் இல்லையா, மூன்றாவது பெக்கில் அதற்காக சிவதாசன் தன் தாடையை சொறிந்தவாறு பேச்சிழக்க குடிக்கவும் பேசவும் தெரியாத பரத் என்று அழைக்கப்படுகிற லூயிஸ் வயிற்றுக்கு நாலு இட்டிலி,  ஒரு முட்டை தோசை, ஒரு மாட்டுக் கறி சாப்பிட்டு விட்டு அப்படி இப்படி நடந்து அவனே எதிர்பாராத வகையில் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு தூங்கி விட்டான். காலையில் கோயம்பத்தூரில் மூத்திரம் கழித்த பிறகு மறுபடியும் சென்னைக்கு திரும்புகிற வண்டியை தேடிக் கொண்டு போய் அதில் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு சிகரெட்டு பிடிக்க இறங்கி அதைக் கொளுத்தாமல் தலையை சொறிந்து விறுவிறுவென நடந்து வேறு ஒரு வண்டியில் ஏறி அதிலும் டிக்கெட் எடுத்து தூங்கினான். ஒரு முறை கண்களை விழித்துப் பார்த்த போது திருச்சூர் தாண்டி இருந்தது. அடுத்த தடவை விழித்து பத்தனம்திட்டாவிற்கும் வந்து சேர்ந்து ஒரு அறையை தேர்ந்து கொண்டு தூங்காமல் சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு வெள்ளப்பமும் கடலையும் சாப்பிட்டான்.

நல்ல மழை.

மழை பற்றியும்,  மழை கவிதைகள் பற்றியும், மழை வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டியவர்கள் பற்றியும் யோசித்து சினிமாவில் மழை வந்தால் கட்டிக் கொண்டு தவறு செய்து விடும் ஜோடிகளைப் பற்றியும் யோசனை செய்து இருந்த போது தூங்கி சிவதாசன் டாங்கோ ஆடுவதற்கு திடுக்கிட்டான். சற்று வெட்கத்துடன் அவர் கவனித்து விடாமல் மெல்ல நகர்ந்த போது அவனிடம் யாரோ ஆட சொல்லுகிறார்கள். இன்னது என்று சொல்ல முடியாத இரைச்சல்கள் பரவி குவிந்திருந்தாலும் காசு கிடைக்கும் என்கிற கிசுகிசுப்பு உரக்கக் கேட்டது. யாருடைய குரல் அது?அதை தேடி நடந்து ஒரு பாம்பை மிதித்து படிக்கட்டில் உருண்ட போது முழித்து, சில்லிட்டிருந்த சன்னலை திறந்து மீண்டும் மழையை பார்த்தவாறிருந்தான். ஜீப்பில் கொஞ்ச பேரை தான் ஏற்றினார்கள். அடக்க ஒடுக்கமாய் இருக்கிற தன்னை ஒரு வேற்றாளாய் கருதிக் கொண்டாலும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதில் ஆசுவாசம் பெற்று மழையை வெறித்த போது எப்படியோ இந்த நிமிடம் திரும்பிப் போய் விடுவோம் என்கிற நம்பிக்கை புரியவில்லை. நாலு பேர் நசுக்கிக் கொண்டிருக்க வளைவிலும் திரிவிலும் தெறித்த மழைத் துளிகளில் நனைந்து நடுங்கியவாறு இருந்தது மேலும் கொடுமை ஆயிற்று,  மாதவனின் வீட்டுக்கு போகிற முக்கில் இருந்த சாயா கடையில் ஒதுங்கியது. காற்று சாட்டை போல வீறியது. சிகரெட்டின் கங்கு மின்னுவதை பார்த்தவாறு புகையை நெஞ்சுக்கு இழுத்து மிகவும் தாமதித்து புகையை வெளியேற்றும் போது இவன் குளிரால் நடுங்குவதை பார்த்திருந்த கடை ஆள் வழக்கம் போன்ற மலையாளி உரிமையுடன் சாயா போடுகிறேன் என்ற போது மறுத்தான்.  

தண்ணீரைத் தவிர எதுவும் குடிப்பதில்லை.

நெல்லிக்காய்,  இஞ்சி,  சுக்கு, திப்பிலி, கடுக்காய் போன்ற சாறுகளை பிரயோகம் செய்து அடைந்த பேறுகளை மக்கள் சேவையின் பொருட்டு ஒரு காட்சியாக்கி படத்தில் வைக்க எழுதும் போது தன் இருமலின் நடுவே சுவர் இருந்தால் தான் சித்திரம் என்று இயக்குனர் சொன்னதை பொருந்தாத இடத்தில் நின்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவன் சற்று நேரம் தசை பயிற்சி செய்து பார்த்து அப்புறம் தான் மாதவன் முன் நின்று சிரித்தான், நல்லவேளை. அப்படியும் அது பாதி தான் வந்தது.  மாதவன் எதற்கு வந்தாய் என்று கேட்கவில்லை. அவருடைய மனைவி,  மகள், மகன் யாருமே இவன் யார் என்றும் ஒரு சொல் கேளாத நிலையில் தேங்காய் பாலில் ஊறின பத்திரியில் ஆட்டுக்கறியை சுருட்டி விழுங்கினது வழுக்கிப் போகாமல் இருந்ததற்குக் காரணம் சிஜி. அவனது பால்யத்தில் எட்டும் பொட்டும் தெரியாத பாவாடைக்காரியாய் இருந்து மாங்காய்க்கு அடி வாங்கி மிரட்டலுக்கு மண்ணை தின்று யாரும் இல்லாத நேரத்தில் காட்டுகிறானே என்கிற அனுதாபத்தாலும் ஆர்வத்தினாலும் குஞ்சை பார்த்து பதிலுக்கு தனது பொக்கிஷத்தைக் காட்டி இந்த பத்திரியை தேங்காய்ப்பாலை ஆட்டுக்கறியை விரும்பியவள்.    மாதவனின் மகள் வாயைக் கோணிக்கொள்ளுவதும், மனைவி தலையை வெட்டிக் கொண்டு கூந்தலை பின்னுக்கு ஒதுக்குவதும் , மகன் ஏதோ பத்திரிக்கையை புரட்டியவாறு கொறிப்பதும் போனில் கூப்பாடு போட்டு பேசிக் கொண்டிருக்கிற மாதவனை சீண்டுவதற்கா அல்லது தன்னை துரத்துவதற்கா என்கிற தன்மானத்தின் நீர்க்கோடு நகர்ந்தவாவாறு இருக்க சிஜி பாடத் துவங்கும் போதெல்லாம் இவனது சுவாசக் காற்றைப் பிடுங்கிக் கொண்டு அவளது இதழ்கள் பிரியும் பிரம்மாண்டமான கணம் பெரும்யுகமாய் விரிந்து பரவியிருந்தது. ஒரு முறை கண்களை மூடித் திறந்து தன்னை இழுத்து வெளியே தள்ளும் போது அவர்களிடம் இவன் பரத் என்கிறார். சினிமா பண்ண காசு கேட்டு வந்திருக்கிறான் என்று தொடர்கிறார். ஏற்கனவே படம் பண்ண ஒருத்தன் பணம் கேட்டு வந்து இருக்கிறான் என்று இரண்டு மூன்று பேரிடம் தொலைபேசியில் சொல்லியாயிற்று. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிற காரணத்தினால் நகைச்சுவை குண்டானில் நல்ல கருத்துக்களை போட்டு அடித்து மிக்ஸ் பண்ணி விதரணம் பண்ணப் போனால் பணம் கொட்டி விட்டுப் போகிறது என்பதை சற்று தள்ளி இருந்த ஒரு ரப்பர் தோப்பில் புகை விடும் போது கமறினான்.  உடனடியாய் கிளம்புவது என்று முடிவெடுத்தான்.

தலையசைத்தார்.

மழை வலுத்திருந்தது. மனசின் எல்லா மூலைகளையும் சிதறடித்துக் கொண்டிருந்தது. எந்தக் கேள்விகளும் இல்லை. இருந்தால் அர்த்தமில்லை. பிறப்புக்கு பக்கத்தில் எங்கேயோ சேகரம் ஆனதை திரட்டிக் கொண்டு மார்பை நிமிர்த்திய கோளாறு ஆடுகிற பெரு நடனத்தை சொல்ல வேண்டும். ஒரு தாய் பறவையின் சிறகு போல உலகு வெறும் மனிதாபிமானத்தால் நெய்யப்பட்டிருப்பதால் எரியும் போதெல்லாம் களித்து சுற்றி சூழ்ந்து போகி மேளம் அடிப்பவர்களோடு ஒரு காலம் ஒரே தட்டில் சாப்பிட்டிருந்தான். சிறிய காரணம் கூட இல்லாமல் சிஜியை தவற விட்டிருந்தான். உயிர் பிழைப்பின் மலினமான பொய்களில் தோய்ந்து ஊறிக் கிடந்த பழக்கம் தான் கேவலம் ஒரு தலையசைப்புக்கு அடித்துக் கொட்டுகிற மழையில் இப்படி ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி எல்லாவற்றையும் வாங்கி முடித்து தொப்பலாய் அவனை காரில் ஏற்றுகிறது. மாதவன் புன்னகையில் கார் உறுமிக் கிளம்பி நகர்ந்தது. பத்து ஊர் திருவிழா போல மத்தளம் கொட்டும் மழை காருக்கு வெளியே வெறும் புகை. ஜன சந்தடி இல்லாது காடு பிடித்துக் கிடக்கும் குன்றில் ஏறுவதை ஊகித்துக் கொண்டான். ஒரு பாலத்தைக் கடக்கும் போது எதோ கடலுக்குள் இறங்குவது போல மனசில் திடுக்கிட்டது அப்படியே அங்கேயே இருந்து கொண்டிருந்தது ஏன் என்று அவனுக்கு தெரியும் என்றாலும் அவன் அந்தப் புதிர் பிராந்தியத்தில் காலடி வைக்கவில்லை. சம்மந்தம் இல்லாமல் மூச்சை பிடித்துக் கொண்டிருந்தான். "டீராதே"  என்று பாறை போல இறுகியிருந்த கதவை தட்டி அவள் வந்த போது கூட. 

டிரைவரும் அவனுமாய் வாங்கி வந்த பொருட்களை முற்றத்தில் வைத்தார்கள். ஒரு முறை நிமிர்ந்த போது "ஆங்" என்ற மாதிரி கேட்டது.  அது நீயா- வாங்க-  இருக்கிறாயா- ஓகே,  சரி, விடு என்று ஏதேதோ அர்த்தமாகிற சப்தம். துல்லியமாய் மலையாளிகளுடையது. மாதவன் தனது அடிபொளி பிஸ்னஸ் மகாத்மியங்களை மிடறு மிடறாய் அடித்து ஏற்றின ஒட்காவினால் சத்தம் கூட்டியவாறு போனது அவளுக்காகவேதான். மழையில் கேட்டிருக்காது. வறுத்த சாளை மீன்களையும் வேக வைத்த முட்டைகளையும் கொண்டு வந்து வைத்து சாட்சாத் ஒரு வேலைக்காரியைப் போலவே வேறென்ன வேண்டும் பாணியில் நின்றவள் இப்ப தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் போல சட்டென்று திரும்பி ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்தாள், மழையின் குளிர் வந்து தொட்டு பற்களில் கூசி அவனது கொட்டைகளுக்குள் இருந்த நரம்பு கூட அசைந்தது. ஒ, நீ குடிக்க மாட்டாயா என்று அவள் கேட்டதாகவே நினைத்தான். எல்லோரும் ஆளைப் போட்டால் நிழலைத் தள்ளிக் கொண்டு போய் போடும் மாதவன் என்று தன்னைப் பற்றி கொஞ்சம் நேரம் முன்னால் சொல்லியிருந்த அந்த ஆள்  தனது முகத்தில் ஒரு ஓநாயின் பார்வையைக் கொண்டு வந்து அவளிடம் இவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா என்று சிரித்தார். 

கஞ்சா குடிக்கலாம். அப்பா அதை குடித்தவன் இல்லை. கலை என்கிற சாமானை தலையில் சுமந்து கொண்டு நடக்கிறவன் கரையில் உட்கார்ந்து கொண்டு ஒடுகிற கால நதியை ஒடுகிறதே என்று பார்ப்பான். அந்த இடத்தை விட்டு பெயராமல் தானும் நசித்து பிறரையும் சிதறடிக்கவைக்க அவன் படைக்கப்பட்டிருப்பதால் அம்மா மூச்சுக் காற்றுக்கு அல்லாடி எவனோ ஒருவனுடன் ஓடிப் போனாள்.  வேறென்ன. திரும்பிய திக்கெல்லாம் பசி. லட்ஷம் பேர் சமையத்துக்கு மணமாகவும் ருசியாகவும் கண்ணியமாகவும் தின்று கொண்டிருப்பதை திடுக்கிட்டுப் பார்தவாறு வளரும் சிறுவனின் வயிற்றில் உலவிய மிருகம் உலகில் இருக்கிற ஒவ்வொருவனும் ஒவ்வொரு வஞ்சகன் என்று முடிவு செய்த பிறகு மாதவன் காசுகாரனானான். உச்சி முதல் பாதம் வரை முனைந்து ஒவ்வொரு அசைவிலும் ரத்தம் கரைத்த துயர் அறியாமல் அதே வஞ்சக உலகம் இதே மாதவனை காசு மரமாய் கற்பனை செய்து கை தொழுகிறது,  காலை நக்கவோ கழுத்தைப் பிடிக்கவோ அலைபாய்கிறது.

இவன். ஹ ஹ ஹ ஹ.  என் காசில் தான் சினிமா எடுக்க வேண்டுமாம்.

அவள் பண்டொரு ஆட்கள் சொன்ன மாதிரி பல்லாயிரம் கல் தொலைவில் இருந்தது போல இருக்கவே இவனுக்கு சற்று பரவாயில்லை போல இருந்தது. மாதவன் தன்னை குறி வைத்து இழிவு செய்வதெல்லாம் எடுபடாமல் போனதற்கு அவனளவில் பலரும் பல வழி எடுத்து பலரை அவமதிப்பதன் மூலமாய் தான் தனது இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததுதான். இதையெல்லாம் பழகி வந்த காலம் உள்ளில் ஒரு மரவட்டையாய் ஊர்வதும் நிற்காது. அவளை ஏறிட்டு பார்ப்பதற்குள் உள்ளே சென்றவள் சற்றைக்குள் விறுவிறுவென வந்து அந்தத் தேனீரை வைத்தாள்.

“ஹஹஹஹ. எதையும் கேட்டு விட்டு செய்ய மாட்டாயா ராதா. அவன் எதையும் குடிப்பது இல்லை. தேனீரையும் தான். எடுத்துப் போ“  என்று சுழிந்தவரை பார்க்காதவளே போல இவனிடம் வெறுமனே ஆணையிட்டாள்.

“குடிக்கி.”

இல்லை.இதை மறுத்துப் பேச முடியாது. சினிமா ஆள் இல்லையா, காட்சிகளின் ஓட்டத்தில் இதோ பால் கொதிக்கிறது. தேயிலை கலக்கிறது. சக்கரையை சேர்க்கிறாள். அப்படி இப்படி என இரண்டு முறை சிக்கனமாய் ஆற்றி விட்டு கிளாசில் ஊற்றுகிறாள். பார்க்கிறாள். பின்னர் அதை எடுத்துக் குடிக்கிறாள். ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அந்தத் தேனீரை தொண்டைக்குள் இறக்கவில்லை. தன் வாய் முழுவதிலும் அதன் சுவையை அறிந்து கொண்டு அப்படியே மீண்டும் கிளாசில் அதை உமிழ்கிறாள். துயருடன் பார்த்திருந்தாள். விருட்டென கிளம்பி வந்து இவன் முன்னே வைக்கிறாள்.

“குடிக்கி”

குடித்தான்.

அவளைப் பார்க்கிற அவரை பாராதிருந்து அவள் தன்னை பார்த்திருப்பதை இவன் பார்க்காமல் அறிந்து அதை குடித்தான். என்ன மழை? காற்றில் இருந்த ஈரம் விசிறியது. நனைய வைத்து கேலி செய்வது போல ஒரு பிரமை. அது வளர்ந்து, பையன்களோடு குளிக்கப் போய் ஒரு தடவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது போல ரத்ததில் சத்தம் கேட்கிறது. இந்தக் கணம் அப்படியே சாய்ந்து கண் மூட வேண்டும் என எண்ணிய போது மாதவன் காரை எடுக்க சொன்னார்.

காரில் ஏறப் போகும் போது மழையின் பொழிவினூடே ஒரு சாயம் போன ஒவியம் போல பாதியாய் தெரிந்தவளிடம்  “வரட்டே சிஜி?”  என்றான்.

”சிஜி என்ன சிஜி? வப்பாடியா இருந்தாலும் பேரு கேட்டா மரியாதை வரணும். ராதா. அதுதான் அவளோட பேரு!”

அந்தக் கடுமையான மழை இரவில், புகைவண்டிகள் வராமல் ஆள் அரவமில்லாமல் வெறிச்சோடி மழையை ஏற்று அள்ளி கொண்டிருந்த ஒரு பேயைப் போல இருந்த ஸ்டேஷனில் தனியாய் படுத்திருந்து சென்னை வந்து சேர்ந்து என்னவும் செய்யவில்லை. டான்கோ ஹாலை தேடவில்லை. அப்படி இருந்தால் கூட ஜெண்டில் மேன்களின் சபையில் தாறுமாறாய் சுழன்றாடி பேண்டை அவிழ்த்து மக்களுக்கு குண்டியைக் காட்ட முடியாது. ஒரு போதும் பிராண்டோ நின்று நடித்த பாலாக முடியாத பட்ஷம், பரத்தை விலக்கி லூயிஸ் எனும் சொந்தப் பெயரிலேயே ஒரு சுமாரான படம் பண்ணினான். கல்யாணம் பண்ணினான். இவன் வந்து போன ஒரு மாதத்தில் சிஜி தேனீரில் விஷம் கலந்து கொடுத்து மாதவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு போனதை அறிந்து இவன் பார்க்கப் போன போது அவள் முடியாது என்று மறுத்து விட இனி எப்போதும் அவளை பார்க்கவே இயலாதென்று முற்றும் முழுதுமாய் உணர்ந்து கயிறை அறுத்து விட்டாயிற்று.  எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புகார்கள் இல்லை. வாழ்க்கை போகிறது.

ஒரே ஒரு விஷயம்.

லுயிஸ் இப்போது தேனீர் குடிக்கிறான். காப்பி குடிக்கிறான். இளனீர் மற்றும் குளிர் பானம் போன்றவற்றை குடிக்கிறான். விஸ்கி பிராண்டி ரம் ஒட்கா எல்லாவற்றையுமே குடிக்கிறான். காசு இல்லாத போது நகரத்தை தாண்டி சற்று தூரமாய் போய் பூண்டு ஊறுகாயை நக்கிக் கொண்டு பட்டை சாரயத்தைக் கூட குடிக்கிறான்.

 குடிக்க,  குடிக்க,  குடிக்க தாகம் அதிகரித்தவாறு இருக்கிறது.



ராதா மாதவம் 
ஒரு சிறுகதை.



விஜயா என்கிற பெயர் சாதாரணமாய் இருக்கிறது அல்லவா?

அவளே அப்படி இருந்தாள். பேசுவது சாதாரணம்,  பேசுவதோ அசாதாரணம். அவள் ஒரு இடத்துக்கு வந்து இருந்து கடந்து சென்றால் பலரும் கவனித்திருக்க முடியாது தான். ஆனால் அவளை சற்றே கூர்மையாய் கவனித்து இருந்தால், கருத்த கண்கள். அப்புறம் அவை பெரிதாய் விரிந்திருக்கும். அதில் சுறா மீன் ஒன்று வாயைத் திறந்து கொண்டு மேலெழுவது போல கற்பனை செய்யலாம். யாருக்கும் பிடி கொடுக்காத அந்தக் கண்களால் அவள் எப்போதும் மேனகாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பாள்.

அப்படியா. இன்னும் இருக்கிறது.

அலுவலகம் ஓயும் நேரம் உண்டு. ஆண் ஊழியர்கள் வந்து மொய்க்காத,  பெண் ஊழியைகள் வந்து வளவளக்காத, அவள் பிரார்த்தித்துக் காத்திருந்த இடைவெளியில் மேஜை மீது தலையை சாய்த்துக் கொள்ளும் மேனகாவின் முதுகு அல்லது தோளில் தன்னை படர்த்திக் கொண்டு பின்னங்கழுத்தை முகர்ந்து கொள்வது உண்டு. முலைகளை அழுத்தியதில்லை. பயம். சில நிமிஷங்கள் கூட நீடிக்காத அந்த வதை பொழுதில் நெஞ்சு இடிப்பதை அறிந்து கொள்ளக் கூடாது. இரவெல்லாம் இரக்கமற்ற உலகை நினைத்து கண்ணீர் பெருக்குவாள். காலையில் சொல்ல வேண்டும் என்று கருதியதெல்லாம் மறந்து போகும். ஒருநாள் வரும் என்று காத்திருப்பது பெருகும் துயரில் அலை பாய்வது தான் என்றாலும் அந்த நாள் வராமல் போகவில்லை. மேனகாவிற்கு வீடு மாற்ற பணம் தேவைப்பட்ட போது மேனகாவிற்கே கூட சொல்லாமல் வளையல்களை வைத்து பணம் கொடுத்த மறுநாள் அவள் இவளது டயரியை தற்செயலாக பார்த்து விட்டாள். அதன் நூறு பக்கங்களில் தனது பெயர் வரிசையாய் எழுதப்பட்டிருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை .மறுநாள் கும்பல் கூடி கிளம்பிப் போன வேடந்தாங்கலில் ஆயிரம் பறவைகள் ஒரே நேரத்தில் சுழன்று தெற்கு திக்கில் ஒரு விரிந்த மேகம் போல மறைந்தவாறிருந்த போது மற்றவர்களுடன் சேர்ந்து கை தட்டி விட்டு அவர்களுடன் இறங்காமல் மேனகாவை தடுத்து நிறுத்தினாள். பக்கத்திலேயே ஒரு பறவை மீது மற்றொன்று வழுக்கிக் கொண்டிருக்கும் போக்கில் வெறித்தவாறு "மேனு" என்றாள்.

"ம்?"

"சாவலாமானு இருக்குடி. ஐலவ்யூ"

"ஏ சீய்"

"எனக்கு ஒண்ணும் வேணா. ஒரே ஒரு தடவ உன் வாய்ல முத்தம் குடுக்கவா? ஒரு தடவ தான். அப்றம் நான் கேக்கவே மாட்டேன்."

மேனகா ஆடாமல் அசையாமல் பார்த்தாள்.

அழுகை போல பரவி வந்த ஒன்று உதடுகளில் துடிக்க "ப்ளீஸ்"  என்றாள்.

பேசாமல் வாவென்று கூட்டிப் போனாள் மேனகா. இவள் தொடர்ந்தாள். நாளுக்கு நாள் நெஞ்சு வலி கூடிக் கொண்டிருப்பதாய் சுய இரக்கம் தோன்றிக் கொண்டிருந்தது. முறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் ஏவுவதை எல்லாம் செய்து கொண்டு, அவளிடம் வழிந்தவாறு இருந்த ஆம்பிளைக் கழுதைகளை சபித்தவாறு காத்திருந்தாள். அலுவலகத்தில் தனிமை கூடும் போது, அல்லது லிப்டில், ஸ்டோர்ரூமில், டாய்லெட்டில் இருவர் மட்டுமே இருக்கும் போது இதோ, இதோ என்றிருக்கும். இந்த நொடியில் மேனகா இவளைப் பற்றி இழுத்து இதழ்களைப் பிளந்து தருவாள் என்று திரண்டு முட்டி பால் திரியும் போதெல்லாம் சோர்வு சுருட்டியது. மேனகா அவ்வப்போது சிரித்துக் கொண்டிருப்பது சரியாய் இல்லை. சில நேரம் சில பெண்களிடம் அவள் கிசுகிசுப்பதையும் நெருங்கி செல்லும் போது அவள் மாற்றி பேசுவதையும் அறிந்தாள். வீட்டில் கூடின சபையில் இவள் கலக்கத்துடன் நின்றதை வேறு ஒரு நினைப்பில் பார்த்து அனைவருக்கும் பிடித்துப் போகவே, தவிர்க்க முடியாத நிச்சய நாளின் முன் நாள் விஜயா மேனகாவின் காலில் விழுந்தாள். விம்மி அழுதவாறு எழுந்து கொண்டு மேனகாவின் உதடுகளில் முத்தப் போன போது சீ யென்று முகம் சுழிந்து விலகிப் போனது அவளது முகம். அதை எப்போதும் யோசித்தவாறிருந்தாள், "நீங்க பாடுவீங்களா?" என்று காசிவிஸ்வநாதன் கேட்கும் போது கூட.

பாச்சுலர் பார்ட்டியில் இருந்து விடை பெற்றுக் கொண்டு முதலிரவு அறைக்கு வந்து இலேசான பிராந்தி மணத்துடன் இவள் பக்கத்தில் அமர்ந்த அவன் பாடட்டுமா என்று ஒரு வார்த்தை கேட்கவே இல்லை. டிஎம்எஸ் அல்லது சிவாஜி கணேசன் மாதிரி தலையால் வட்டம் போட்டுக் கொண்டு "அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்"  என்று பெருமிதத்துடன் பாடி விட்டு "உனக்குஎன்னென்னபிடிக்கும்" என்று கேட்டு விட்டு அவள் பதில் சொல்லுவதற்குள் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்று பாதியை சொல்லியவாறு அவளுடைய மொத்த துணிகளையும் அவிழ்த்து விட்டான். இவளது ஒத்துழைப்பு தேவைப்படாத நிலையில் தனுஷ்கோடி சாம்பியன் மாதிரி ஒற்றையாய் நீந்தி முடித்து மூச்சு வாங்கியவாறு "தூங்கிக்கோ" என்று எழுந்து போனான். விடிகிற ஒளி கண்ணைக் குத்தியதில் கோபமாய் புரண்டு படுத்த போது அவன் பக்கத்தில் இருந்தான், குறட்டை மாதிரி எதுவும் இல்லை. எழுந்து அமர்ந்து வெகு நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த போது வாழ்க்கை புரிந்து விட்ட மாதிரி இருந்தது. வேறென்ன. மாமியார் வேலைக்கு அனுப்பவில்லை. குடும்ப விளக்காக இருக்க சொன்னாள். உடலில் சக்கரை முற்றி கால் வெட்டப்பட்டு கிடந்தவளின் பீ மூத்திரத்தை அள்ள வேண்டியிருந்தது. அன்றாடம் நாற்றம் பிய்க்கிற அம்மணத்தை பார்க்க வேண்டியிருந்தது. எங்கேயாவது சிதறி விடுவோமோ என்று பயந்து கடுகளவேனும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு அவள் மேனகாவை தான் நினைத்துக் கொள்ளுவாள். அவளது உடலை கற்பனை செய்து அவளையே ஒரு பானமாக்கி அருந்துவது போல உணர்ச்சியுடன் தன்னை தானே பிழிந்து போட்டு தூங்கி எழுந்து அன்றாடம் பெற்று விட முடியும் கையகல நம்பிக்கையை. இருட்டு. தனிமை. நூல் பிடிக்காத ஒரு சிறிய கதை. எல்லாம் அவளுடையது. அந்த அந்தரங்கத்தில் லட்ஷம் பறவைகள் எல்லா திக்கிலும் பறந்தன.

"என்னோட கேரக்டரப் பத்தி நான் சொல்லணும்னா எனக்கு எப்பவும் பிராண்டி தான் பிடிக்கும்" என்றான் காசிவிஸ்வநாதன்.

"எனக்கு ரம்மு" என்றான் நீலமேகம்.

விஜயாவும், மேனகாவும் சிரித்துக் கொண்டார்கள். இன்ன மாதிரி என்று சொல்ல முடியாத சிரிப்பு. சிம்பனி மாதிரிஉயர்ந்து கொண்டே வந்தது கோழி பொரிகிற மணம். சமையலறையை குறை சொல்ல முடியாது. என்றாலும் பொருட்களை எடுக்கிற சாக்கில் இவள் மீது பட்டுக் கொண்டே இருந்தாள் மேனகா. விஜயாவுக்கு எல்லா கதைகளும் தெரியும். தனக்கு எல்லா கதைகளும் தெரியும் என்பது மேனகாவுக்கு தெரியுமா என்பது தான் தெரியாது. விஜயாவிற்கு கல்யாணம் முடிந்த அந்த நேரத்தில் மேனகாவின் காதலன் என்று உறுதி செய்யப்பட்டிருந்தவன் யுவராஜ். மோசமில்லை. காதல் கிளிகள் சுதந்திரமாய் வானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. ஒரு தடவை திருப்பதிப் பக்கம் ரெய்ட் செய்யப்பட்ட லாட்ஜில் இருவரும் பிடிபட அதற்கு அப்புறம் யாரோ சொல்வார் பேச்சைக் கேட்டு தான்
திருந்தி விட்டதாய் அறிவிப்பு பண்ணி மேனகா பக்கமே திரும்பாமல் இருந்திருக்கிறான் அவன். பக்கத்து வீட்டில் இருந்த நீல மேகத்திடம் தான் மேனகா கண்ணீர் கடிதங்களை கொடுத்து அனுப்பியவாறு இருந்திருக்கிறாள். யுவராஜின் கல் மனசு கரையவில்லை. வேலைக்கு போவதை எல்லாம் நிறுத்தி விட்டு மேனகாவிற்கு ஆறுதல் சொல்லுவதையே தன் முழு நேரப் பணியாய் எடுத்துக் கொண்டு விட்ட நீல மேகத்தை ஒரு நாள் விடியற்காலை தனது கழுத்தில் தாலி கட்ட வைத்து அவனுடன் இல்லற வாழ்வில் புகுந்து விட்டாள் அவள். பத்தே நாளில் தாடி வளர்த்து யுவராஜ் இவர்கள் எடுத்த புது வீட்டுப் பக்கம் சுற்றவே "நான்அவனோடுபோய்விடவா?" என்று ஒரு சலனத்தில் மேனகா கேட்கப் போய் நீலமேகம் மின் விசிறியில் மாட்டிக் கொள்ளப் போய் காப்பாற்றினார்கள். அப்புறம் அவன் பல முறை அப்படி காப்பாற்றப்பட்டிருக்கிறான். இவளும் பல ஆண்களுடன் தத்தளிப்போடு இருந்து, மீண்டு வந்திருக்கிறாள். விஜயாவைப் போலவே மேனகாவிற்கும் இரண்டு குழந்தைகள்.

"இல்ல,  இல்ல,  இல்ல நீலமேகம். காசி,  நீ சரி இல்லனு என்னப் பாத்து சொல்லுங்க. நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதில ஏதாவது ஒரு உண்மை இருக்கலாமுன்னு நினைச்சுப்பேன். ஆனா நீங்க இப்படி சொன்னது தப்பு. பிராண்டியை தப்பு சொன்னது தப்பு. எத்தன வருஷமா நான் இத குடிச்சிக்கிட்டிருக்கேன் தெரியுமா, இதனோட அரும பெருமய புரிஞ்சுக்காம வாய விட்டுட்டீங்களே,  எனக்கு அப்பிடியே வலிக்குது நீலமேகம்."

நீலமேகம் வருத்தத்துடன் கைகளைப் பிசைந்தான். "தப்புசெஞ்சிட்டேன்,  ஓகே. மன்னிச்சுக்கோங்க. இதுக்கு இப்பவே நான் ஒரு பிராயசித்தம் பண்ணிடறேன்,  சரியா?"

"என்ன பிராயசித்தம்?"

"நான் இது வரைக்கும் ரம்மு தானே குடிச்சேன்? பாத்தீங்க இல்ல? இப்ப உங்க கையால 90 போடுங்க. என்னது?"

"என்னது?"

"பிராண்டி சார்,  பிராண்டி"  என்றுவிட்டு "அத குடிச்சிட்ட பெறகு என் லைஃப்ல இனிமே பிராண்டி தான் குடிப்பேன்னு பிராமிஸ் பண்ணிடறேன் சார்"  என்கிறான் நீலமேகம்.

அங்கே இருந்து ஒதுக்குப்புறமாய் இருந்த படுக்கையறைக்கு விஜயாவை உந்திக் கொண்டு சென்றது மேனகா தான். அவளே பேஸ்ட் மாதிரி ஒட்டி கொண்டும் உட்கார்ந்தாள். "எப்பிடி இருந்தோம் இல்ல?எப்பவும் உன்ன நினைச்சுக்கிட்டு இருப்பேன் தெரியுமா?" என்று கிசுகிசுத்த போது அவளது மூச்சுக் காற்று பட்டு காதோரத்தில் மயிர்கள் நிமிர்ந்தன. ஓண்ணுக்கு வருவது போல தோன்றியது. மேனகா ஒரு முறை வெளியே எட்டிப் பார்த்து விட்டு விஜயாவின் கன்னங்களைப் பற்றி நோக்கம் தெரியாமல் அடித்துக் கொண்டு போகிற வேகத்துடன் உதடுகளைக் கவ்வி நுழைய யத்தனித்து கடித்து முடித்தாள். வாய் மீது ஈரமாய் உறுத்தின எச்சிலை துடைத்துக் கொண்டு விஜயா மெல்ல எழுந்து போனாள் ஒரு புன்னகையுடன். மேனகா முகம் பேயடித்தது போல இருந்தாலும் சற்று நேரத்தில் அதை சரி பண்ண முடிந்தது.

நீலமேகம் காசியுடன் உட்கார்ந்து வெளுத்துக் கட்டினான். விஜயாவும் பிள்ளைகளும் மேனகாவும் சாப்பிட்டார்கள். அதற்கு முன்னேயே விஜயா ஒரு நெக்லஸ்ஸை எடுத்துக் கொடுத்து விற்று எடுத்துக் கொள்ள சொல்லி விட்டாள். இதை திருப்பிக் கொடுக்க சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மறுபடியும் ஏதாவது கஷ்டம் என்றால் வெட்கம் கொள்ளாமல் கேளு என்றும் பல வார்த்தைகளில் சொன்னாள். மேனகாவின் விழிகளில் ஈரம் படருவதற்குள் சாப்பாட்டில் உட்கார வைத்து விட்டாள். நீலமேகமும் காசியும் குழறலோடு கடைசியாய் பிராண்டியைப் பற்றி பேசி அணைத்துக் கொள்ள மேனகாவிடம் நான் இப்போது முன்பு போல இல்லை என்பதை மட்டும் சற்று அழுத்தமாகவே சொல்லி விடை கொடுத்தாள் இவள்.

காசி படுத்து விட்டான். குழந்தைகளும் தூங்கி விட்டன. என்ன என்று தெரியாத ஒரு படபடப்பு. ஏதோ ஒரு மாதிரி. செத்து போன மாமியாரின் மல நாற்றம் எட்டி பார்த்து அவளுக்குள் நிரம்ப துவங்கியது.  "எருமை" என்று மேனகாவை திரும்ப திரும்ப திட்டிக் கொண்டே ஈறுகளில் ரத்தம் வருகிற வரை பல் தேய்த்தாள். திருப்தி வருகிற வரை சுடுநீரால் கொப்புளித்துக் கொண்டிருந்து விட்டு ஆன்லைனில் வந்து உட்கார்ந்தாள்.

மீண்டும் உள் பெட்டியில் பிரதீபாவின் செய்தி இருந்தது. வழக்கம் போல தான். விஜயா உன் குளுமையை என்னால் உணர முடிகிறது என்று ஆங்கிலத்தில். அவளது பக்கத்தில் இருந்த ஒரு புகைப்படத்தை சற்று நேரம் பார்த்த விஜயா இனி காலம் தாழ்த்துவதில்லை என்று நினைத்த போது எழும்பி வந்த கோபத்தில் முகங்கள் இல்லை. யாரை எல்லாமோ போட்டு வெட்டுவது போல ஒரு சினிமா கணத்தில் ஓடி முடிந்தது. மேனகாவை விட ஆங்கிலத்தில் புலமை கொண்ட விஜயா சரசரவென டைப் பண்ணினாள். இருபத்தி ஐந்தை தாண்டாத பிரதீபாவின் புன்னகையை துடித்தவாறு.

"எனக்கு உன்னை தெரியும். பேசி பேசி சொல்லாமல் இருந்தால் எப்படி? நகராமல் இருந்தால் எப்படி?.எப்போது சந்தித்துக் கொள்ளப் போகிறோம்?"

பால்வீதி
ஒருசிறுகதை.