Monday, October 22, 2018





நீங்கள் வலி நிவாரணியின் ஆள் தானா
என்று நான் கேட்டுக் கொள்வதில்லை
ஒரு பார்வையில்
ஒரு மனிதக் கணிப்பில்
ஒரு அகங்காரத்தில்
நானும் அப்படி பட்டு விட மாட்டேன்
காலைச்சூரியன், நடைபயிற்சி, பச்சை தேயிலை,
கோபுர தரிசனம் எதுவுமில்லை
இருந்தா இரு போனா போ
ஒரு நாளைக்கு கஞ்சி, ஒரு நாளைக்கு கரிமீனு
எல்லாம் சரிதான்
இஸ்கி புஸ்கி இல்லை அஸ்கு புஸ்கு இல்லை
என்னை எங்கேயாவது விற்று எங்கேயாவது
மீட்டுக் கொள்வேன்
என்றாலும் ஏதேனும் கடைகோடி முட்டு சந்துகளில்
சிக்கும்போது
ஒரு வேளை என்னைப்பற்றி
ஒருவேளை உன்னைப்பற்றி
தப்பிக்க முடியாத போது வலிக்கும்.
பொதுப்படையாய் சந்தேகமில்லாமல்
நான் வலி நிவாரணியின் ஆள். 






அவளை எழுதியாயிற்று
அதை படமாக்கி அவளது கதை என்றாயிற்று
நானும் இதோவென்று ஒரு திரைக்கதைக்கு
கிளர்ந்ததுண்டு
நெருங்கும் போதெல்லாம் நகர வேண்டியிருந்தது
அவள் அழகி
வந்ததை வாரி சுருட்டி விழுங்கி
நெருப்பு போல புன்னகைத்தவள்
அவள் திரைக்குப் பின்னே நின்று
சொரிந்திருந்தாள் என்கிற நம்பிக்கையில்
கண்ணீர் தடம் தொடர்ந்து எத்தனைக் காதம் நடக்க முடியும்
மேலும் நமது கற்பனைகள்
சோம்பலான நம்முடைய குடிலின் முற்றத்தில்
நாம் பிளந்து தந்த தென்னோலைகளை
அசைபோடும் யானை.

யாருடைய சரிதமும் நமது கையிடுக்கில் இறங்கும் தண்ணீர் என்று வந்து விடுகிறது செல்லம்,
ஏனென்றால் வாழ்வு.
அது நொடிக்கு தாவும் பட்டாம்பூச்சி
அல்லவா?