Sunday, August 23, 2020

  

மேடையில் ஒரு காவியம் கிறக்கி

தட்டிக்கு பின்னால் வந்து நின்ற கிருஷ்ணன் 

ஊனமுற்ற கால் தொங்க நீல சாயத்தில் முத்திட்ட 

துளிகளுடன் பீடி குடித்தான் 

இப்போது அவற்றில் மின்னுகிற மஞ்சள் கங்கு

அஸ்தினாபுரத்து தீபங்கள் போல் 

ஜோக்கு காட்டுகிறது 

அவன் எடுத்த புகை நுரையீரலை 

சீண்டி திரும்பியவாறு இருந்த போதிலும்

ஆயிரம் காதம் தூரத்தில் 

அந்த காவியத்தில் 

அந்த முத்திரையும் முழக்கமும் கூடி வந்த

தங்கத் தருணத்தில்,

முன்னம் ஒரு தினம்   

முத்தம் கேட்டபோது இசைந்த காதலியின் 

முகக்குறிப்பை இசைக்கிற மனசின் விரல்கள் 

போல 


அவன் இன்னும் பார்க்கவில்லை 

ராஜமாணிக்கம் நெருங்கிக் கொண்டிருக்கிறார் 

வட்டி கட்ட வேண்டும்





Monday, August 17, 2020

 


அவளுக்கு எல்லாமே வேறு 

ஒருமுறை மட்டுமே பார்த்த 

நினைவில் இருந்து மறைந்து போன 

காடாம் புழ அம்ம மட்டுமே அவள் 

தேவி, ஆங்கிலப் பத்திரிகையில் தட்டச்சு 

செய்து ஆயிரங்கள் வாங்கியிருந்தும் 

இந்திரா காந்திக்கு அப்புறம் அவளுக்கு 

யாரையும் தெரியாது என்பது நூதனமான 

பனிப்புகை. ஒரு முத்தம் அவளைக் கவ்விய போது 

அதைத் தின்று முடிக்குமளவு சன்னதம் 

கொள்வாள், ஆண்டு முடித்து சீறும்நெருப்பில்

ஒளிரக் கூட செய்வாள், ஒளியாமல் நேர்கொள்வாள்   

வளர்ந்த யாரையும் மறந்து அவற்றில் 

இருந்த அத்தனை சிசுக்களின் முகமும் அறிவாள்

அவளிடம் அறிவதற்கு நாம் அறிந்ததையெல்லாம் 

மறக்க வேண்டும் என்பதால் 

கொடு மழையில் தீப்பற்றின மரம் போல் 

நினைவு வந்து என்னை தேடியிருக்கிறாயா 

என்பதைக் கேட்க ஆகவில்லை.