Tuesday, October 8, 2019




நம்மை நாமே அனுமதித்துக் கொள்ள
தயங்கும் தருணங்களை
பிழைப்பின் வாள் கண்காணித்திருக்கும்
நூறு நாற்காலிகளில் அமரும் அசுரம்
இன்று போய் நாளை வா என்கும்
உனது பல்லை தந்தால் குருதி ருசி அறிவேன்
என்று சோறு காட்டும்
சந்துகள் பூராவிலும் தேர் தள்ளி
சன்னதம் வந்தது போலவே குத்தாட்டம்
போடும்.
ஒன்று சொல்ல விரும்புகிறேன்
முகமழிந்த ஆத்மாக்களுடன் பைத்தியம் பேசி
சொட்டுக்களாய் நிறைந்த
சுயம்
மேலும் பைத்தியங்களின் நரம்பு நுழைய
இருக்கும்.

உனக்கு வளையாத லிபிகளுடன் எழுதாத கவிதை
இருந்தவாறிருக்கிறது.
வாயிலில் வந்து நின்று
கரகரப்பான குரலில் கதவை இடிக்கிறது
திகுதிகுவென பெருகும் சிரிப்பை
உருட்டி விளையாடுகிறது நித்தமிந்த
அசுரம். ஒரு சிட்டிகையில் புறாக்கள்
எழுவது போல
பயம். ஒரு இமைப்பில் கண்ணுள்
மின்னிட்ட நிறம். ஒரு கனவில் வெளிறிட்ட
வாழ்வு. ஒரு ரோகியில் வெளியேறிய
தெய்வம். ஒரு சிசுவின் புன்முறுவல்
துப்பாக்கி.

தம்பி, பரோட்டாவை திருப்பிப் போடு.