Saturday, July 30, 2016

தில்ருபா.
ஒரு சிறுகதை.





எனக்கு இந்தக் கதையை சொல்லுவதில் பெரிய விருப்பமெல்லாம் கிடையாது. எல்லோரும் எப்படியாவது இருந்து ஒழியுங்கள் என்பது என் முடிவு. ஆனால் நிதின் அழைத்தான். கதைக்கு உதவ வேண்டும் என்றான். சரி. வேறு வழியில்லை. அவன் தங்கமணியின் மகன். நான் சினிமாவில் இருந்து விலகி ஒரு பிம்பாகவும் இருந்து பிழைக்கலாம் என்று பல காலமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் குண்டுசட்டியைத் தாண்டி குதிக்க ஆகவில்லை என்பதால் அதன் தொடர்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அப்புறம் பொல்லாத இந்த வயிற்றுப் பிழைப்பு. வாங்க சார். வணக்கம் சார். குட் மாணிங்க், குட் நைட் அண்ட் ஸ்வீட் ட்ரீம்ஸ்  சார். மூளையை திருடிக் குடிக்கும் பத்தாயிரம் அட்டைகள் முன் படுத்துக் கிடந்த பிறகு எப்ப திருந்தப் போறனோ என்று இன்னும் விசனம் பாடிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்ய? அதுகளோ வீசி எறிந்த எலும்புத் துண்டுகளின் கணக்கு பேசிக் கொண்டிருக்கின்றன.

" அங்கிள், எதாவது சொல்லுங்க ! "

" இர்றா ! "

பரத்தும் சந்தியாவும் காதலர்கள். எப்பவும் அடிதடி. ஒருவரை மற்றவர் வெறுப்பேற்றிக் கொள்ளுவதில் அவன் எல்லை தாண்டி விடுகிறான். வேறு ஒரு பெண்ணுடன் படுத்து விடுகிறான். குற்றம் ! அவளும் விட்டு விடுவதில்லை. அவன் நொந்து போகிற மாதிரி ஒரு இமாலய தவறை செய்து விடுகிறாள். அது என்ன தவறாய் இருக்க வேண்டும் என்று தான் என்னை குடைந்து கொண்டிருக்கிறான். அவளும் வேறு ஒருவனோடு படுத்து விட வேண்டியது தானே என்றால் அது இடிக்கிறதாம். மக்களுக்கு பிடிக்காது என்கிறான் கனத்த குரலில். லவ் மீ இஃப் யு டேர் போன்ற படங்களை பாருடா என்றால் தலையை சொறிகிறான். சோம்பேறி. படம் போட்டாலே தூங்கி விடுவான்.  பொதுவாகவே தின்னுவதும், தூங்குவதும் தான். தடியன். எஞ்சினீயரிங்க் முடித்த பிறகு சினிமா என்றிருக்கிறான். அதுவும் தமிழ் சினிமா. அதில் அவனால் எதையும் செய்ய முடியும் என்று ஒரு பிடிவாதம்.

எப்படியும் இவன் தன் அப்பனைத்தான் கொண்டிருப்பான்.

ஒரு நாள் போனில் " அவனுக்கு ஒரு மயிரும் தெரியாது ரவி ! " என்று தங்கமணியாய் என்னிடம் சொன்னாள்.

அப்படிதான் நானும் நினைக்கிறேன். ஆயினும் அதை வெளியில் சொல்லுவது அபவாதங்களை தான் சேர்க்கும். அது மட்டுமல்லாமல் என் வயதுக்கு, அனுபவத்துக்கு இளைய தலைமுறையை நோக்கி உதடு பிதுக்குவதில் பெருமை என்ன. ஆத்மார்த்தமாவே நான் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு இது.

எது.

79- 80 தான். வெங்காய விலை எல்லாம் கூடி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து எம் ஜி ஆர் அரசை டிஸ்மிஸ் செய்தார்கள். அப்போது நான் கேரளத்தில் இருந்தேன். இங்கே இருந்து நீ பிடுங்க வேண்டியது எதுவும் இல்லை என்று அப்பா துரத்தி விட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம். போதாதா? மூன்று மாதம் மொழி கைகூடாமல் பிதுங்கி, அப்புறம் ஜித்தனாகி தங்கமணியை காதலிக்க ஆரம்பித்தேன். எனக்கு பதினெட்டு. அவளுக்கு பதினேழு. எழுத்துக் கூட்டி போபனும் மோளியும் படித்து டிஸ்கஷன் செய்தேன். மாமாவே எனது கண்கள் விரிந்து மூடாததை கவனித்து என்னடா என்றார். அம்மம்மா ம் ம் என்று முனகிக் கொண்டு எழுந்து போனாள். எதிர் வீடு தான். அவளது அம்மா நான் சிகரெட்டு பற்ற வைக்க தீப்பெட்டி தருவதுண்டு.

ஒரு நாள் ஐ லவ் யூ சொல்லியாக வேண்டும்.

தங்கமணியைப் பற்றி நிறைய சொல்லலாம். ஏதோ கொஞ்சமாய் பேசுவது போலிருக்கும். பத்து நாள் முகம் பார்க்க முடியாது போனாலும் சொல்லி விட்டுப் போன பிரபஞ்ச ரகசியத்துடன் நான் பாட்டுக்கு சல்லாபித்திருப்பேன். அம்மாவிடமும், தம்பியுடனும் வரும் சம்பாஷணையில் அவள் சொல்லுவதெல்லாம் பொய். அப்படிதான் அவள் எல்லோருடனும் இருப்பது போலவும் இல்லாதது போலவுமிருந்த்தது. மிகவும் யோசித்து வைத்து நான் சொல்லும் ஜோக்குக்கு யாருமே சிரிக்க முடியாது. அவளும் சிரிக்க மாட்டாள். ஒரு கால் அரைக்கால் புன்னகை தென்பட இலேசாய் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டுப் போவாள். அது உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை போலிருக்கும். இப்போது கூட நான் ஒரு நாளை நினைத்துக் கொள்கிறேன். சிவராத்திரி பூரம். யானைகள் அணிவகுத்து நிற்க பஞ்சவாத்தியத்தின் கிறக்கத்துடன் தாளப்பொலியில் தீபம் ஏந்தி நின்ற தங்கமணியின் முகத்தில் நான் நெருப்பை பார்த்தேன். அல்லது விட்டு விடலாம், அதன் எதிரொளிப்பை பார்த்தேன். அன்று நடு இரவு பூரப் பறம்பின் பின்னால் ஒடும் நதிக்கரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு நட்ஷத்திரங்களில் கண்ணீர் விட்டது ஆர்வக் கோளாறாய் தான் இருந்திருக்கும். அதன் துல்லியத்தை நான் எந்தக் காலத்திலும் ஐயமுற மாட்டேன். இந்தத் தருணங்கள் தான் உயிராசையை போற்றுகிறது என்பதையெல்லாம் இன்று சொல்ல முடிவதாயிருந்தாலும் மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் வேறு.

நிலை கொள்ளாமல் தவித்திருந்த ஒரு நாளில் அவள் கல்லூரி விட்டு வரவில்லை. ப்ரீ டிகிரிக்காரி. ஏதாவது இருக்குமல்லவா. காத்து கண்கள் பூத்த அந்த நேரத்தில் இருந்த வில்ஸ் பாக்கெட் வேறு தீர்ந்து விட்டது. கிளம்பும் போது மாமி சக்கரையும் சோப் பவுடரையும் வாங்க முடியுமா என்றாள். அப்படியே முட்டை கோசு கிடைத்தாலும் வாங்கிக் கொள் என்று பையை கொடுத்தாள். ஒன்றரை கி மீ நடக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே நடக்கிற கடை. பராக்கு பார்த்துக் கொண்டு வளைவில் ஒரு மேடு ஏறும்போது என் எதிரே ஒரு பெண். ஜீன்ஸ் பேன்ட் போட்டு கறுப்பு முழுக்கை சட்டை மடித்து, முட்டை கண்ணாடி போட்டுக் கொண்டு அசாதாரணமாய். எப்படி இது? வியப்போடு அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே கடக்க என் கண்களை அடித்துப் பார்த்துக் கொண்டு தாண்டி சென்றாள். யோசனையுடன் பத்தடி நடந்து திரும்பிப் பார்க்க அவளும் அந்த கணத்தில் திரும்பிப் பார்க்கிறாள். கண்கள் சந்தித்தன என்றால் அதை சொல்லித் தானே ஆக வேண்டும்? என்ன நடக்கிறது? கடையில் இருந்து முதலில் ஒரு சிகரட்டை வாங்கிப் புகைத்து விட்டு பொருட்களுடன் திரும்பினேன். மாமா, மாமி, குழந்தைகளுடன் அந்தப் பெண்ணும் வீட்டு முற்றத்தில் இருந்தாள். என்னைப் பார்த்ததும் எல்லோரும் சி¡¢த்தார்கள்.

அவள் மீரா. என் சகோதரி . பெரியம்மா மகள். பம்பாயில் உறவினர் வீட்டில் தங்கி படிக்கப் போயிருந்தாள். பத்து வருடங்களுக்கு முன்னே தப்பிதவறி மாமா கல்யாணத்துக்கு வந்த போது விளையாடின குழந்தைகளில் அவளும் ஒருத்தியாய் இருந்திருப்பாள்.

" ஏண்டா, என்ன அப்படிப் பாத்த? "

" நீ கூடத் தான் பாத்த ! "

ரத்தம் என்கிறார் மாமா. இருக்கலாம். சாவியை வாங்கிக் கொண்டு மாமாவின் புதிய பறம்பை பார்க்கப் போய் பேசி கொண்டிருந்தோம். நால் ரெண்டு எட்டு சிகரட்டை காலி பண்ணி விட்டு, மிச்சமிருந்த கடைசி சிகரட்டை மாறி மாறி புகைத்தோம். மறுபடியும் ஒன்றரை கி மீ நடந்து வில்ஸ் பாக்கெட் வாங்கிக் கொண்டோம். திரும்பி வீட்டிற்கு போகிறோம் என்று பார்த்தால் எதிர் வீட்டுக்குள் என்னொடு நுழைந்தாள். தங்கமணியும் அவளது அம்மாவும் மீராவை விமரிசையாய் வரவேற்றார்கள். பேச்சு வாக்கில் மீரா டீ வேண்டும் என்றாள். நான் தங்கமணியை மட்டுமே பூலோகத்தில் இருப்பவளாய் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அம்மா நகர்ந்ததும் நடந்தது தான் சம்பவம்.

மீராவை நோக்கி பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்ட தங்கமணி தன் இதழ்களை ஏந்த- செம்ம கிஸ். வாய்ப்பே இல்லை. நடப்பது என்ன என்றே புரியாத நிலையில் குறைந்த பட்ஷம் நான் திரும்பிக் கொள்ளக் கூட இல்லை.

தங்கமணி ஒரு சதி லீலாவதியல்லவா?

நரேந்திரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாள். அவனோடு ஒட்டிப் பிறந்த சுரேந்திரனை மீராவுக்கு புடித்துப் போட்டாள். பேசி பேசி வழிவகை செய்து எர்ணாகுளத்தில் இரண்டு குடும்பங்களும் ஒரே பிளாட்டில் சேர்ந்து வசிக்க செய்தாள். மீராவும், தங்கமணியும் வாழ்ந்தனர். பழங்குடிகளுக்கான போராட்டங்களில் பல நேரம் மீராவுடன் தங்கமணியும் இருந்தாள். ஒரு நாள் அடையாளம் தெரியாத நபர்களால் மீரா கொல்லப்பட்ட போது சவ அடக்கத்துக்கு போயிருந்தேன். தனிமையில் தங்கமணி மீராவின் விதவையாய் தன்னை நினைத்துக் கொள்ளும் போது பெருமையாய் இருக்கிறது என்றாள். மறுக்க ஒன்றுமில்லை. என்னிடம் இருந்து வில்ஸை பிடுங்கி பற்ற வைத்து நீ யாரையாவது காதலிக்கிறாயா என்று மாமாவின் பறம்பில் கேட்ட போது நான் பதில் சொல்லாமல் விட்டது ஒரு விதமான விதி. ஆனால் அந்த நிமிடத்திலிருந்து மீராவை மதித்தேன். அவள் என் தங்கமணியை முத்தமிட்டது கூட எனக்கு பெருமையாய் தான் இருந்தது.  சோர்வூட்டும் இந்த அடிபிடி சர்க்கஸ் வாழ்க்கையில் ஏதாவது பத்திரிக்கையில்  மீராவின் புகைப்படத்தை காண நேரும் போது வாரிப் போடும். காலம் முழுக்க மீராவின் சுனையாய் இருந்த தங்கமணியை மெச்சிக் கொள்ளுவேன், காதலுடன். இன்னும் சொல்லப் போனால் வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதோ இந்தப் பயலின் எதிரே அமர்ந்து கொண்டிருப்பதும் அவளுக்காகத் தான்.

என்ன நடந்ததோ. இவன் ஒரு விதத்தில் தனது குடும்பத்திலிருந்து அன்னியப்பட்டிருந்தான் என்பதில் மாற்றில்லை. கவலைகள் திரண்டு விடும் என்று தோன்றும் போதெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விடுவது. அத்தனை பேரையும் வெறுக்கும் முனைப்பு பட்டவர்த்தனம். கூட உதவியாய் வேலை செய்கிறவர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்களது தரித்திரத்தை ரசிப்பது கூட புரிகிறது. இன்னும் நெருக்கத்தில் சொல்லுவது என்றால் சுரண்ட வேண்டியவர்களை சுரண்டித்தான் ஆவேன் என்பது போல என்னை அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.

ஒரு நாள் பல பேச்சுக்கு நடுவில் மிகவும் இங்கிதமான ஒரு பாவனையில் கேட்டேன். " உனக்கு உன் அம்மாவை மிகவும் பிடிக்குமில்லையா? "

" பிடிக்காது. அம்மான்னு இல்ல. எவளையும். தேவடியாளுங்க ! "

பார்த்திருந்தேன், எந்த வித முக பாவனையையும் காட்டி விடாமல்.

" அதனால தான் சொல்றேன். இனிமே பொண்ணுங்க சீன பேசறப்ப அது கண்ணியமா வரணும். அங்கிள், அவங்க எப்படி ஒழுக்கமா வாழணும்னு நாம கத்துக் குடுக்கணும். புரியுதா ?”
என்றான்.

" புரியுதுடா ! " என்றேன்.


No comments:

Post a Comment