Tuesday, October 18, 2011

சினிமா சினிமா சினிமா











அன்புள்ள விஜி,

நலமா
. இந்த அவசர யுகத்தில் நமக்குள்ளே கடிதம் எழுதிக் கொள்வது விசித்திரம்தான். எழுதும்  ஆசை துரத்துகிறது. நமது குழுவில் நீயும் நானும் எதையாவது எழுத ஒரு சாக்கு கிடைக்குமா என்று பார்த்தவர்கள். ஆனால் விஜி, திரைகதையில் ஈடுபடுவதை தவிர மற்ற எல்லாவற்றிலும் இப்போது சலிப்பு. எனினும் பார் இதோ உனக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறேன். இரவு கறுத்துக் கொ ண் டிருக்கிறது. மிகவும் கறாரான பாஷையில் ரேட்டு பேசி அறைக்கு வந்த மீனலோசனி அயர்ச்சியுடன் தூங்கி கொண்டியிருக்கிறாள்.

நீ
யோசிப்பது போல இப்போது இந்த கடிதம் எழுத காரணம் இருக்கிறது.

இன்று
காலையில் தான் 'மோதிப் பார்' பார்த்தேன். ரொம்ப கஷ்டமாயிருந்தது. இதை கோபி என்கிற ஒரு ஆள் உண்டாக்கினான் என்று  சொல்ல முடியுமா ? ஒரு காட்சி பாக்கியில்லாமல் அத்தனை காட்சிகளும் மொத்தமாய் திருடப்பட்டவை. ஒரிஜினல் படத்தின் பெயர் என்ன என்று உனக்கு தெரிந்திருக்குமே. ஒரு சந்திப்பில் அவன் இரண்டு கைகளையும் விரித்து, புஜத்தை திரட்டி சினிமா தான் எனக்கு சுவாசம் என்று பல்லை கடித்து கொண்டது ஞாபகம்  வருகிறது. போகட்டும், படம் எனக்கு இரண்டு பேருடைய  ஞாபகங்களை கிளறியது.

ஒன்று சண்முகத்தை (ஏனென்றால் சண்முகமும் கோபியும் இனி இரண்டில்லை) அடுத்தது சண்முகத்தின் படத்தில் நடித்த நமது ரம்யா. நான் அவளை மனமுருகி காதலித்தேன் தெரியுமா? சிரிக்காதே. நான் சொல்வது நிஜம்.  




டேய்
, அவளது கன்ன கதுப்புகளும், சிரிக்கும் போது அதில் விழுகிற குழிகளும், பல் வரிசையும் ஒரு தாக்குதல் தானே? பக்கத்தில் நின்றவர்கள் உதை வாங்கியது போல இருப்பார்கள். இப்போது யோசித்து பார்த்தால் புரிகிறது. நீ உள்பட நாம் ஆறு பேருமே அவளை காதலித்தோம். நமக்கு தனித்தனியாய் எதோ விசேஷங்கள் இருப்பதாகவும் அவள் அதை கண்டு பிடித்து உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி விடுவாளோ என்றும் கனவு காணுகிற தனித்த இனம் அல்லவா அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்?

உனது
தமக்கையின் கல்யாணம் நிமித்தமாய் உன்னால் பாண்டிச்சேரி ஷெட்யூலுக்கு  வர முடியவில்லை. சண்முகம் வைத்திருந்த கழிசடை திரைக்கதையில் முத்தக் காட்சி ஒன்றிருந்தது. நினைவிருக்கிறதா. கடற்கரையில் கேமரா வைப்பதற்கு முன்னாலேயே டாபர்மாமா வாயில் எல்லாம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டு, ஒரு தடவை தன் ஆணுறுப்பை அழுத்தி விட்டுக் கொண்டான். நான் அவன் போட வேண்டிய காஸ்ட்யூமை சுமந்து கொண்டு நின்றிருந்தேன். சட்டையை வாங்காமல் என்னை காக்க வைப்பதில் அவனுக்கு ஒரு திருப்தி வரும். நான் மட்டும் என்ன. ஒரு டாபரை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி தான் அவனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.  வழக்கம் போலவே என் மீது இருக்கிற விரோதத்தால் மாடு சூத்து மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு " ரம்யா ரெடியா ? " என்று கேட்டான்.

அவள் அங்கே மாஸ்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்த சிறுகதைகளை படித்து கொண்டிருந்தாள். தூக்க முகத்தை கழுவ கூட இல்லை. சண்முகத்தின் ஆணையை நான் போய் சொன்ன போது ரம்யாவின் அத்தை ஒரு ஏளன சிரிப்பு சிரித்தது எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஷாட் வைக்கிற நேரத்தில் ரம்யா அங்கே இருப்பாள். சண்முகமோ, இந்த டாபரோ எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கவில்லை.

"
என்ன?"

"என்ன?"

"
ரம்யா ரெடியான்னு கேட்டனே ?"

"
தெரியாது"

"
என்னாது, தெரியாதா? ஏய், நான் இந்த படத்தோட ஹீரோடா. ஹீரோயின் ரெடியான்னு கேட்டா தெரியாதுன்னு சொல்ற ?"

"
சார், இந்த ஷேட்ட வாங்கிக்கறீங்களா? எனக்கு நெறைய வேல இருக்கு"

ஜார்ஜ்
பதினோரு மணிக்கு கோணம் அமைத்தார். டாபர் சண்முகத்திடம் கைகளை பிசைந்து தனது டென்ஷனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது சர்வ அலட்சியத்துடன், பயங்கர திமிராய் ரம்யா தன் அத்தையோடு வந்தாள். ஆம், அப்படித்தான், அவளுக்கென்று ஒரு பிரத்யேக நாற்காலி இருக்கும் அல்லவா, அதில் உட்காரவும் செய்தாள். டாபர் இளித்துக் கொண்டு மொக்கையாய் ஒரு ஹாய் சொன்னதை அவள் எறிடவில்லை . நான் அந்த நேரத்தில் டாபருடைய முகத்தை பார்க்காமல் இருந்திருப்பேனா? சந்தோஷத்தில் என் மனசு கும்மாளி போட்டது. டாபர் ஓரமாய் ஒரு தடவை என்னை பொசுக்குவது போல என்னை பார்த்துக் கொண்டான்.

கோபி ஸ்க்ரிப்ட் பைலை தூக்கிக் கொண்டு நிற்க, சண்முகம் புகைப்படத்துக்கு தோதாயிருக்கிற வகையில் ஒரு டைரக்டர் போலவே நின்று கொண்டு   ரம்யாவுக்கு காட்சியை விளக்க ஆரம்பித்தான். 




கதையில்
இது மிகவும் குறிப்பிடத்  தகுந்த இடம். அது என்ன, ஆங், திருப்பு முனை. காதலர்கள் இருவரும் காதலர் தின பரிசுகளை பரிமாறிக்கொண்டு  பிறகு ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள். அப்புறம் காதலனாய் இருக்கிறவன் ஸ்மார்ட் அண்ட் கியூட் அல்லவா? குறும்புடன் காதலியிடம் முத்தம் கேட்கிறான். அவள் வெட்கப்படுகிறாளா, இல்லை. ஓகே என்று மிக நேரடியாய் உணர்ச்சியின் வெள்ளத்தில் இறங்கி நின்றுக் கொண்டு அவனை அணைத்துக்கொள்ள, டாபர் அவள் இதழ் தேனை பருகவேண்டும்.

"
ரெடியா ரம்யா ?"

"
ரெடி சார் "

"
விக்னேஷ் நீங்க ரெடியா?"

"
ரெடி சார் ,  ஒரு டௌட்"

"
என்ன டௌட் ?"

"
நான் ஒரு கைய அவங்க தோள்ள போட்டு புடிச்சிகறேன். இன்னொரு கையால தாடைய நிமுத்துட்டுமா ? அப்பத்தான் நான் அவங்க வாய உறிய முடியும்".

"
யார் வாய சார் ? "

யூனிட்டே
இப்போது ரம்யாவை பார்த்தது. அவள் மிக தெளிவாய் சொன்னாள். ட்ராலியில் காமிரா வட்டம் அடிக்கும் போது இருவரும் எதிரும் புதிருமாய் தலையை சாய்த்து கொள்ளலாம். காட்சி காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதை போலவே இருக்கும். இந்த டாபர்மாமா என் முகத்தை தன் முகத்தை தன் விரலால் கூட டச் பண்ண கூடாது. கதையின் நியாயப்படி காதலர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் சார், என் உதட்டின் வழியே எவனோ எச்சிலை உறிவதா முக்கியம்?.

தயாரிப்பாளரின்
ட்ரம்பட்டுகள்  சமாதான புறாக்களாய் சிறகடித்து தங்கள் முக்கியத்துவத்தை காட்டிக்கொண்டார்கள். ரம்யா தன் பாட்டுக்கு உட்கார்ந்து ப்ராப்பர்டியான 'காலேஜ்' நோட்டில் சும்மாவேனும் கிறுக்கி கொண்டிருந்தாள். அது எப்போதுமே அவள் வழக்கம் தான்.

சண்முகம் நெற்றி பொட்டை கசக்க, பக்கத்தில் நின்றிருந்த கோபி  துயரமடைந்திருப்பது தெரிந்தது. டாபர் ரேபோக் காலணி மணலில் புதைந்து போகிற அளவுக்கு காலை தூக்கி இடித்து,  "நடிக்கணும்னு வந்தாச்சு  இல்ல, காசு   வாங்கியாச்சுல்ல, எதுக்கு இப்போ இவ பெரிய பத்தினி மாதிரி பண்ணிக்கிறா ? ஷண்முகம் சார், உங்களுக்கே தெரியும் ஒரு சோள் இந்த உலகத்திலேயே கிடையாது. என்னவோ இவ கோயிலுக்குள்ள இருந்து எறங்கி வந்தா மாதிரி பண்ணிக்கிறாளே. நீங்கதான் சார் கேப்டன் ஆப் தி ஷிப். கிஸ் பண்ணிதான் ஆவணும்னு சொல்லுங்க" என்றான்.

ஜார்ஜ்
குறுக்கே வந்து தன் தரப்பை சொன்னார். ரம்யா சொல்வது போல ஷாட்டை எடுத்து முடிக்க முடியும். காதலர்கள் முத்தமிட்டு கொள்கிறார்கள் என்பது தானே கதை. அதை நான் எடுத்து தருகிறேன். யாரு யாரையும் உறிய தேவையில்லை.

"
சாரி ஜார்ஜ், சினிமால எனக்கு பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை, காம்ப்ரமைஸ்".

சண்முகம்
  சொன்னதை யாரும் சீரியசாய் எடுத்து கொள்ள மாட்டார்கள். அவனால் முடிந்த அரைமணி நேரத்திற்கு ஒரு கலககாரனை போலவே விறைப்பு காட்டி விட்டு அப்புறம் டாபரிடம் "ஓகே, ஷாட்டுக்கு போலாம்" என்று தன் பாட்டுக்கு பட பிடிப்பை ஆரம்பித்து நடத்தினான். ரம்யா சொன்னது போலவே காட்சி வந்தது. டாபரால் ரம்யாவை உறிய முடியவில்லை. நான் அடிக்கடி டாபரின் முன்னாள் போய் நின்றபோதும் அவன் என் பக்கம் திரும்பவே இல்லை. எனக்குள்ளே மிக மிக அதிகமாகவே நான் குதூகலித்துக் கொண்டேன்.





படபிடிப்பு எப்படியோ நடந்து கொண்டிருந்தது. நீயெல்லாம் திரும்பி வந்து விட்டாய். பொள்ளாச்சி ஷெட்யூலுக்கு தயாராகி கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தான் ரம்யா ஒரு திரைப்படத்தில் தங்கை பாத்திரத்துக்கு ஒப்பந்தம் ஆனாள். அது வல்லூறுகளின் படம். ஒவ்வொரு இரவுக்கும் மப்பு போட்டுக் கொண்டு, எவளையாவது பிய்த்து தின்னாவிட்டால் அவன்களால் முடியாது.பேருக்கு காமா சோமாவென்று எடுத்து தள்ளுகிற குப்பைகளை பிரமாதமாய் மார்கெட்டில் விற்று இன்றும் சினிமாவில் ஜாம்பவான்களாகவே அவர்கள் நீடிப்பது உனக்கு தெரிந்த கதைதான். இவர்களுடைய படத்தில் தன் பங்கை முடித்து கொடுத்து விட்டுதான் ரம்யா நம் லொகேஷனுக்கு வந்து சேர்ந்தாள்.

கவனித்திருந்தாயா.

தெறித்து விழத் துடித்திருக்கும் அந்த விழிகளின் தீ அணைந்து போயிருந்தது.

தூங்கி வழிந்தாள். கையில் கிடைத்ததெல்லாம் தின்றாள். படித்த புத்தகத்தை பற்றியோ, பார்த்த சினிமாவைப் பற்றியோ, நீ ஏதாவது பேசியிருந்தால் அவள் அதற்கு எந்த ஆமோதிப்பையும் கொடுத்திருக்க மாட்டாள். அதெல்லாம் ஏன். உச்சக்கட்ட காட்சியை படம் பண்ணி கொண்டிருக்கிற நேரத்தில் சுமார் ஆயிரம் பேராவது நம்மை சுற்றி இருந்திருக்கமாட்டார்கள்?. சேலை விலகி கிடந்தது. இரண்டு பக்க முலைகளையும் தர்ம தரிசனம் பார்த்துக் கொண்டிருக்கிற கூட்டத்தை சட்டை செய்யாமல் அவள் கரும்பு கடித்துக் கொண்டிருந்தாள். இதற்கு எல்லாம் உச்சமாக நமது டாபர் மாமா பயல் அடித்த ஒரு சப்பை ஜோக்குக்கு அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். ஒரு சந்தர்பத்தில் டாபர் அவளிடம் குசு குசு என்று சீரியசாய் ஏதோ விஷயத்தை பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். பிசினஸ் பேசினானா ? ஒரு மாஜி ஜனாதிபதியின் மகனெல்லாம் இந்த டாபருக்கு கஸ்டமர்  ஆயிற்றே. மனைவியை பக்கத்து அறைக்கு அனுப்பிவைத்து விட்டு தன் அறையில் அவன் ஹாயாய் தூங்குவான்.

தசையினை தீச்சுடுவது போல நான் அந்த நேரத்தில் அப்நார்மலாய் உலவிக் கொண்டிருந்தேன். சண்முகம் தனது எல்லையை விட்டு கடந்து வந்து என்னிடம் அதிகாரத்தை காட்டியபோது என்னடா என்றே கேட்டுவிட்டேன். அதைவிடு. இறுதியில் ஒரு நாள் மிகுந்த துணிச்சலுடன் ரம்யாவை நெருங்கி நான் கேட்க நினைத்ததை கேட்டு தொலைத்தேன்.

"ஏதாவது மனசு கஷ்டமா?"

"ஆங்?"

"முன்னமாதிரி இல்ல நீங்க.  எதையோ பீல் பண்ணிகிட்டுருக்கீங்க".

"ஹ, ஹ, ஹ நீ போய் உன் வேலய பாரு அரவிந்த். இன்னொரு தடவ இப்படி நீ ஓவரா பேசினா சண்முகம் சார் கிட்ட சொல்லிடுவேன்".

எனக்கு கோவம் வந்தது.

அதை தீர்த்து கொள்ள வழியும் இருந்தது. எனக்கு பழக்கப்பட்ட எல்லா தமிழ் படங்களினுடைய கற்பழிப்பு கோணங்களையும் ஒரு முகப்படுத்திக் கொண்டு  அவளை கற்பழித்தேன். கதற கதற என்பதை சேர்த்துக் கொள். இது பற்றி நான் விளக்க தேவை இல்லை. எல்லாம் கற்பனையில் தான். ஒன்றிரண்டு முஷ்டிமைதுனங்களுக்கு பிறகு அவளை ஒரு வேசியாய் கருதிக் கொண்டு நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். பூசணிக்காய் உடைக்கிற நாளில் என்னிடம் ஏதோ சொல்ல வந்தாளோ. நான் அப்போது டாபர் ஏவின ஏதோ எடுப்பு வேலையை சாக்கில் நகர்ந்து போக வேண்டி வந்தது.

நான் சொல்ல வருகிற விஷயம் என்ன தெரியுமா ?

இங்க பெங்களூரில் நான்கு நாட்களாக அவள் பெயர் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

முன்பு ஒரு தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டாள் அல்லவா. அவன் ஓடி போன பிறகு வேறு ஒரு ரியல் எஸ்டேட் ஆசாமி தான் அவளோடு இருந்தான். இருவருக்கும் பிறந்த மகனை பிடுங்கி கொண்டு சென்ற வாரம் ஒரு நடு இரவில் அவன் அவளை ரோட்டுக்கு தள்ளி விட்டிருக்கிறான். தடித்து பெருத்து ஒரு காண்டாமிருகத்தைப் போல இருக்கிற ரம்யா சரியான குடி போதையுடன் எச்சில் தெறிக்க பேசுவதை கன்னட சானல்களில் போட்டுக்கொண்டே இருந்தார்கள். கண்ட மேனிக்கு அவள் யார் யாரையோ திட்டி கொண்டிருக்கிறாள். அவள் போட்டிருக்கிற கூலிங் கிளாசும், மாட்டிக்கொண்டிருக்கிற நகை நட்டுகளும் ஏதோ சாராயம் விற்கிற வில்லியை போல காட்டுகிறது. தாங்காமல் நான் தொலைக்காட்சியை அனைத்து வைத்தேன். இன்று கோபி டைரக் ஷன் பண்ணி விட்ட படத்தை பார்த்ததில் இருந்து மறுபடியும் ஒரு குமைச்சல்.






நாலு பெக்கை போட்டு, உடல் வேட்கையை தணித்து என்னை நான் பாலன்ஸ் செய்து கொண்டு நிதானமாய் எழுதினது வரை எல்லாம் சரிதான்.

கதையை, அல்லது கடிதத்தை முடிக்க வேண்டியிருக்கிறது அல்லவா.

நம் படம் முடிந்து எல்லோரும் பிரிந்து போன பிறகும் என்னிடம் சில பிராப்பர்டிகள் இருந்தன. அதில் 'காலேஜ்' நோட்டும் ஒன்று. ரம்யா பொழுது போக்குவது போல் அந்த நோட்டில் கிறுக்குவது வழக்கமாயிற்றே. பார்த்தபோது மொத்தமும் கன்னடம். அப்புறம் இங்கே எனது பட வேலை சம்மந்தமாய் வெகு நாட்கள் இருக்க வேண்டி வரவே சுதீஷ் எனக்கு உதவியாளன் ஆனான். அவனக்கு கன்னடம் தாய் மொழி.  படித்து சொன்னான்.

சாம்பிளுக்கு மூன்று வரிகளை மட்டும் சொல்கிறேன்.

பயமாய் இருக்கிறது, கடவுளே என்னை காப்பாற்று.
பயமாய் இருக்கிறது, கடவுளே என்னை காப்பாற்று.
பயமாய் இருக்கிறது, கடவுளே என்னை காப்பாற்று.



3 comments:

கனகராஜூ பெருமாள் said...

இந்தக்கதையை படிக்கும்போது மனித மனத்தின் கோணல்கள் துருப்பிடித்த கத்தியை வயிற்றில் சொறுகியதைப்போன்று பயத்தை ஏற்படுத்துகிறது.

கனகராஜூ பெருமாள் said...

இந்தக்கதையை படிக்கும்போது மனித மனத்தின் கோணல்கள் துருப்பிடித்த கத்தியை வயிற்றில் சொறுகியதைப்போன்று பயத்தை ஏற்படுத்துகிறது.
ரம்யா வடிவில் பல நடிகைகள், டாபர் மாமாவின் வடிவில் நடிகர்கள், என ஒவ்வொருவரும் யார் யாரையோ ஞாபகப்படுத்துகிறார்கள். சமகால சினிமாவை உங்களைப்போன்று பகடி செய்பவர்கள் மகவும் குறைவு.

பாஸ்கர் சக்தி said...

அருமையான கதை . வெகு சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். பாஸ்கர்சக்தி

Post a Comment